தரிசனம் 2 : 3-5                                     29 பிப்ரவரி, 2020-சனி

“…ஆண்டவர் தன்னிடம் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைத்துக் கொண்டு…. மனங்கசந்து அழுதான்.” – லூக்கா 22 : 61-62

உயிருக்கு பயம் வரும் போது மனிதன் எதையும் விட்டுவிடத் தயங்கமாட்டான். பேதுருவுக்கும் இப்படிப்பட்ட சூழல் வந்த போது அவர் ஆண்டவரை மறுதலித்தார். இருப்பினும் அதை நினைத்து மனங்கசந்து அழுதார். இதுவே நம் தியானப்பகுதி.

ஆண்டவர் இயேசு தம் சீடர்களை தனியாக அழைத்து பல காரியங்களை உபதேசித்து வருவதுண்டு. அதுபோல தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முற்தைய நாளில் அவர்களுக்கு பல காரியங்களை கூறினார். அதில் ஒன்று வரப்போகிற ‘சோதனை.’ அவர் பேதுருவைப் பார்த்து, சாத்தான் உங்களை சோதிக்க போகிறான்; எனவே விசுவாசத்தில் விழுந்து விடாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென கூறினார். ஆனால் பேதுரு இதைப் பெரிதாக எண்ணவில்லை. காவலிலும் சாவிலும் உம்மை விட்டு விலகேன் என்றார். ஆனால் நடந்ததென்ன? இயேசுவைக் கைது செய்த பின், அவர் விசாரிக்கப்பட்ட அரண்மனைக்குள் பேதுருவும் நுழைந்தார். அங்குதான் அவர் அந்த சோதனையை சந்தித்தார். அங்குள்ளவர்கள் நீயும் இயேசுவோடிருந்தவன்தானே என்று கேட்ட போது, தன் உயிர் மேல் உள்ள பற்றினால் ‘இல்லை’ என்றார். ஒன்றுக்கு மூன்று முறை தனக்கும் இயேசுவுக்கும் சம்மந்தமே இல்லை என்றார். விசாரணையின் மத்தியில் இயேசு வெளியே வந்தபோது பேதுருவை உற்றுப் பார்த்தார். அந்த பார்வை பேதுருவை மனம் வருந்தச் செய்தது. ஐயோ, நான் ஆண்டவரை மறுதலித்து விட்டேனே என்று புலம்பினார்.

நம்மில் பலரும் ஆண்டவரை மறுதலித்துக் கொண்டு தான் வருகிறோம். வேலைக்காக, மக்களுக்காக, ஊருக்காக இன்று ஆண்டவரை விட்டுவிட பலர் தயார். அன்பர்களே, இயேசு உங்களையும் உற்றுப் பார்க்கிறார். மனம் திரும்புவோம். மனம் கசந்து அழுத பேதுருவை ஏற்றுக் கொண்ட ஆண்டவர் நம்மையும் ஏற்றுக் கொள்வார். நம் பாவங்களுக்காக மனம் வருந்துவோம். மன்னிப்புப் பெறுவோம்.

எல்லாம் அறிந்த கடவுளே! என்னென்ன காரியங்களில் நாங்கள் உம்மை மறுதலித்து வருகிறோம் என்பதை நீர் அறிவீர். வேலைக்காக, பிறர் தயவை பெற உம்மை மறுத்திருக்கிறோம். இது தவறு என்று ஒத்துக் கொண்டு மன்னிப்பு கோருகிறோம். மன்னிப்பீராக. இயேசுவில் பிதாவே ஆமேன்.