நீதிமொழிகள் 24 : 1-6 25 பிப்ரவரி, 2020-செவ்வாய்
“…வாரும், நீர் தேடுகிற மனுஷனை உனக்குக் காண்பிப்பேன்.” – நியாயாதிபதிகள் 4 : 22
புதிய ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் போது அங்கே நம் தூரத்து உறவினர்களைச் சந்திப்போமானால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் அல்லவா? ஆத்திர அவசரத்திற்கு அவர்களும் நாமும் உதவி செய்து கொள்வோம். யாராவது பிரச்சனை செய்தால் அவர்கள் உதவியை நாடுவோம். இது மனித இயல்பு.
இஸ்ரவேலர் கானான் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த போது, அந்த நாட்டு மன்னன் யாபின் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்தான். இந்த யாபினுக்கு நண்பர் கெபர் என்பவர். கெபர் மோசேயின் மாமாவின் சந்ததியில் வந்தவர். இஸ்ரவேலருக்கு தூரத்துச் சொந்தம் என்றுகூட கூறலாம். இந்த கெபரின் குடும்பத்துக்கு யாபின் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்தது பிடிக்கவில்லை. நண்பராக இருந்தபடியால் சொல்லவும் முடியவில்லை.
இச்சூழலில் தெபோராள் இஸ்ரவேலரை ஊக்குவித்து யாபீனோடு போரிட செய்தாள். படைத்தலைவனாக பாராக் என்பவர் இருந்தார். தெபோராளும் பாராக்கோடு இணைந்து போருக்குச் சென்றாள். இவர்கள் வலிமைமிக்க கானானியரை போரில் எதிர் கொண்டனர். கானானியரின் படைத்தளபதியாக சீசரா என்பவர் இருந்தார். போரில் கானானியர் தோற்கடிக்கப்பட்டனர். சீசரா படைக்களத்திலிருந்து ஓட்டம் பிடித்தார். அவர் நேராக கெபரின் வீட்டிற்கு சென்று ஒளிந்து கொண்டார். கெபரின் மனைவி அவனுக்கு தாகம் தீர்க்க பால் கொடுத்து தனியறையில் படுக்கச் செய்தார். இதுதான் வாய்ப்பு என்று கருதி யாகேல், சீசராவின் நெற்றியில் ஒரு ஆணியை அடித்துக் கொன்று போட்டாள். இதன் வழியாக இஸ்ரவேலரின் விடுதலைக்காக தன்னாலான உதவியை செய்தாள். அப்போது அவனை தேடி வந்த பாராக்கிடம் சொன்னதே ‘வாரும், நீர் தேடினவனை காண்பிப்பேன்’ என்ற நமது தியானப்பகுதி.
நாம் எல்லாரும் பலதரப்பட்ட மக்களாயினும் கிறிஸ்துவின் பெயரால் ஒன்றுபட்டவர்கள். ஒருவர் துன்பங்களை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சமூக வாழ்வு என்பது கூட்டு வாழ்வே. நாம் உதவுவதால் அத்தகைய உதவிகள் நமக்கு கிடைக்க வாய்ப்புண்டு. பலவீனப்பட்டவர்களையும் இறைவன் பயன்படுத்துகிறார். நம்மையும் பயன்படுத்தி வல்லமையான காரியங்களை செய்வார்.
தீமையை வெறுக்கும் சுத்த கண்ணரே! கண் முன்னால் நடக்கும் தீமைகளை கண்டும் காணாமல் போகும் எண்ணத்தை எங்களை விட்டு அகற்றும். துன்புறுவோருடன் துணை நிற்கும் பலத்தை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
