பிரசங்கி 3 : 16-18                                    14 பிப்ரவரி, 2020-வெள்ளி

“…நான் இஸ்ரவேலின் கடவுளாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்தேன்…” – யோசுவா 7 : 20

எந்த ஒரு தவறையும் செய்தவர்கள் அதை உடனடியாக ஒத்துக் கொள்வதில்லை. போலீசார் பாணியில் விசாரிக்கும் போதுதான் உண்மையைக் கூறுவார்கள். இது தண்டனையை அதிகப்படுத்துமேயொழிய, குறைக்காது.

இஸ்ரவேலர் கானான் நாட்டைச் சொந்தமாக்கும் வண்ணமாக ஒவ்வொரு நகரையும் வெற்றி கொண்டு வந்தனர். அவர்கள் எரிகோவை வெற்றி கொண்ட பின் அதைவிட மிகச் சிறிய நகராகிய ஆயியை பிடிக்கச் சென்றனர். ஆனால் அதைப் பிடிக்க முடியாமல் தோற்றுப்போயினர். யோசுவா கடவுளிடம் விசாரித்த போது இதற்கு காரணம் ஆகான் என்பவர் எனத் தெரிந்தது. அப்போது ஆகான் எரிகோவிலிருந்து சில பொருட்களைத் திருடியதாக ஒத்துக் கொண்டான். அந்தத் திருட்டினாலே கடவுள் அவர்களை தோல்வியுறச் செய்தார் என்பதை யோசுவா புரிந்து கொண்டார். ஒத்துக் கொண்ட ஆகான் செய்த பாவ அறிக்கையே நமது தியானப்பகுதி. ஆனால் கடவுளோ, யோசுவாவோ அந்த அறிக்கையை ஏற்கவில்லை. அவன் தண்டிக்கப்பட்டான். அவன் செய்த பாவஅறிக்கை காலம் கடந்த ஒன்றாகும்.

பாவம் நம்மை அழிவிற்கு வழி நடத்தும். எல்லோரும் பாவம் செய்பவர்கள். ஒருவர் செய்கிற பாவம் முழுச் சமூகத்தையும் பாதிக்கும். ஒரு ஓட்டுநர் செய்கிற தவறு பல பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக அமைவதைப்போல. நமது பாவம் பிறரைப் பாதிக்க வழி செய்யக் கூடாது. இதைக் கடவுள் விரும்புவதில்லை. நாம் நமது பொறுப்புகளை உணர்வோம். காலம் கடந்த செயல்கள் நமக்கு பயனற்றது. அது போல காலம் கடந்த மன வருத்தமும் பயனற்றது. நமது செயல் நமக்கும் பிறருக்கும் நன்மை கொண்டு வருவதாக அமையட்டும்.

கருணையுள்ள கடவுளே! எங்கள் பாவங்கள் பிறருக்கு அழிவைத் தந்து விடாதபடி எங்கள் பாவங்களை மன்னியும். நாங்கள் பொறுப்போடு நடந்து பிறர் வாழ துணை செய்ய எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.