2 கொரிந்தியர் 5 : 18-21 28 அக்டோபர், 2019 திங்கள்
“கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி…..” – 2 கொரிந்தியர் 5 : 18
பாவ மன்னிப்பின் அர்த்தத்தைக் காண வேண்டுமா? அவசரத்தில் ஒருவர் தவறு செய்து விட்டார். அது கண்டு பிடிக்கப்பட்டது. போலீஸ், நீதிமன்றம், சிறைவாசம் என்று தொடர வேண்டிய நிலை. தவறு செய்தவர் நிம்மதியிழந்தார். குடும்பம் நிம்மதி இழந்தது.
மனிதர்களுக்குள்ள உறவில் உண்டான விரிசல், மனிதனை நடைபிணம் ஆக்குகிறது. அப்படியானால் இறைவனோடு மனிதருக்கு உள்ள நல்லுறவில் விரிசல் ஏற்பட்டால் எத்தனை கேடுகள் விளையும்? ஆதாம் ஏவாள் பாவம் செய்தனர். ஓடி ஒளிந்தனர். மறைந்து கொண்டனர். இன்றும் மனிதன் இறைவனுக்கு எதிர் நிற்கும் போதெல்லாம் ஓடி ஒளிகிறான். இந்நிலையிலிருந்து மாற வேண்டும் என்பது மனிதனின் ஆசைதான். எந்தச் சமய சடங்குகளாலும் மனிதர் செய்த பாவத்தின் தண்டனைக்குத் தப்பிவிட முடியாது. இதனால்தான் இறைவனே வலிய வந்து உதவினார். பாவ விமோசன வழியும் ஆனார். மனிதரின் பாவங்களைத் தன் மகனாம் இயேசு மேல் ஏற்றினர். சிலுவையில் இயேசு அறையப்பட்டார். இயேசுவின் பலியைப் பரம தந்தை ஏற்றுக் கொண்டார்.
கிறிஸ்து நமது பாவப் பரிகாரி-இவர் வழியாக மன்னிக்கிற மனமுடைய தெய்வத்தின் அன்பு எனக்குக் கிடைத்தது. இப்போது இயேசுவால் நானும் தேவ பிள்ளை ஆக்கப்பட்டிருக்கிறேன். அணுக முடியாத இறைவனை உரிமையுடன் `அப்பா’ என்று அழைக்கும் உரிமை எனக்குக் கிடைத்துள்ளது. நான், நீங்கள், நாம் சிலபொழுது இதை மறந்துவிடுகிறோம். நாமே நமது இரட்சிப்பைச் சம்பாதிக்கத் திட்டமிடுகிறோம். பாவிகளாகிய நம்மைப் பரம பிதாவிற்கு ஏற்புடையவர்கள் ஆக்கிவிட்டார் கிறிஸ்து. இந்தச் செய்தியின் தாக்கம் நமது தின வாழ்வை ஆதிக்கம் செய்வது அவசியம். பாவம் நம்மை அதிகாரம் செய்யாதிருக்க, கிறிஸ்து மட்டுமே நமது ஆதாரம். பாவத்தின் தண்டனை பற்றிய பயம் நம்மை உறுத்தாமலிருக்க, கிறிஸ்துவின் சிலுவையே நமக்கு ஆறுதல், கிறிஸ்துவாம் ஆதாரத்திலும், ஆறுதலிலும் பரம தகப்பனுக்கு ஏற்புடையவர்களாக வாழுவோம்.
கருணையின் பெருக்கால் உமது நேசக்குமாரன் இயேசுவை எனது பதிலாளாகச் சிலுவை மரணத்திற்குக் கையளித்த பரமதந்தையே! உமக்கு ஸ்தோத்திரம். உமது அன்பின் பரிசை நான் அவமதித்து விடாதபடி, என் மனதில் தாழ்மையுடன் கூடிய பக்தியை, உணர்வை உருவாக்கியருளும். மரித்தும் உயிர்த்த இயேசு பெயரில். ஆமேன்.
