அப்போஸ்தலர் 16 : 23-32                                    17 அக்டோபர், 2019 வியாழன்

“…ஐயன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.” – அப்போஸ்தலர் 16 : 30

பவுலும் சீலாவும் பிலிப்பி பட்டணத்தில் நற்செய்தியை முதன்முறையாக அறிவித்துக் கொண்டிருந்தனர். குறி சொல்லும் ஆவியையுடைய பெண் ஒருத்தி, அந்த ஊரில் வாழ்ந்தார். பவுலையும் சீலாவையும் இவள் பின் தொடர்ந்து சென்றாள். `இவர்கள் உன்னதமான கடவுளின் அடியார், இரட்சிப்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறார்கள்’ என்று சத்தம் போட்டுச் சொன்னாள்.

தேவையற்ற இந்த அறிமுகத்தைக் கண்டு எரிச்சலுற்ற பவுலும் சீலாவும் அவளை அதட்டினர். குறிசொல்லும் ஆவியை அவளிடமிருந்து விரட்டினர். பவுலின் இந்தச் செயல், அந்தப் பெண்ணைக் குறி சொல்ல வைத்து பிழைப்பு நடத்திய அவளுடைய எஜமானர்களுக்கு எரிச்சலூட்டியது. தங்கள் பிழைப்பில் மண்ணைக் கொட்டிய பவுலையும், சீலாவையும் சிறையிலிடச் செய்தனர். கடவுளின் அடியார் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. மாறாக நள்ளிரவிலும் கடவுளைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். சிறையில் அவர்கள் விசுவாசத்தைச் சிறையிட முடியவில்லை. இரவுவேளையில் சிறையின் இரும்புக் கதவுகள் தானாய் திறந்தன. இவர்கள் கைகளில் பூட்டியிருந்த விலங்குகள் கழண்டு விழுந்தன. சிறைச்சாலைத் தலைவர் தடுமாறிப் போனார். தனது கவனக் குறைவினால் இப்படி நடந்ததோ என்று நினைத்துத் தற்கொலைக்குத் துணிந்தார். வாளை உருவினார். தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். மறுபடியும் ஒரு எதிர்பாராச் சம்பவம்! தண்டனை பெற்று, கைதிகளாக இருந்தவர்களே தனக்கு ஆறுதல் கூறும் அபூர்வ அனுபவம் பெற்றார் சிறைத்தலைவர். இவையெல்லாம் சிறைச்சாலைத் தலைவரைச் சிந்திக்கத் தூண்டியது.

இந்தக் கைதிகளின் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன என்று அறியத் துடித்தார் சிறைத்தலைவர். இவர் கூறிய வார்த்தைகள் இன்றைய தியான வசனம். `இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்’ – இரட்சிப்பு என்பதன் பொருள் புரிகிறதா? இயேசுவால் கிடைக்கும் மகிழ்ச்சியும் சமாதானமும்தான் இரட்சிப்பு. இந்த மகிழ்ச்சியும் சமாதானமும் இந்த உலக வாழ்வில் தொடங்கி நம்முடைய மரணத்திற்குப் பிறகும் நித்திய வாழ்விலும் தொடர்கிறது. நமது இரட்சிப்பிற்கு ஒரே வழி இயேசுவில் வைக்கும் விசுவாசமே. இயேசுவை விசுவாசி! நீ மட்டுமல்ல… உன்னோடு சேர்ந்தவர்களையும் விசுவாசத்துக்குள் வழி நடத்து.

அன்பின் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள இரட்சிப்பின் மனமகிழ்ச்சிக்காக நன்றி. உமது நேச குமாரன் இயேசு கிறிஸ்துவில் நான் நிலைத்து வாழத் துணை புரியும். இரட்சண்யச் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கும் மனத்துணிவையும் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.