லூக்கா 23 : 33-34 27 செப்டெம்பர் 2019, வெள்ளி
“பொல்லாதவர் பிழைத்திருப்பானேன்?….” – யோபு 21 : 7
வாழ்க்கை வாழ்வதற்கே. ஆனால் நல்லவர் மட்டுமே வாழ்வர் என்றும், தீயர் விரைவில் அழிவர் என்றும் பலர் நம்புவது இயற்கை. யோபு என்பவராலும், தீயவர் வாழ்வதைப் பொறுக்க முடியவில்லை. தீயவர் வாழக் கூடாது என்பது யோபுவின் முடிவு. பொல்லானையும் கடவுள் வாழ வைக்கிறார் என்பதை யோபு அறிந்தார். இந்த அறிவினால் மனம் சலனப்பட்டது. கடவுளின் அறிவைப் புரிந்து கொள்ளவோ, கடவுளுக்குக் கற்றுக் கொடுக்கவோ மனிதரால் முடியாது என்று யோபுவால் ஒத்துக் கொள்வது கடினமாயிருந்தது. யோபு நல்லவர்தான் என்றாலும் `நான் நல்லவன்’ என்ற பெருமை யோபுவை ஆட்டிப் படைத்தது எனலாம். ஆகவே கடவுளின் பரம அறிவை, யோபு குறைத்து மதிப்பிட்டார்.
நல்லவன் வாழ்வான் என்பதும் தீயவன் அழிவான் என்பதும் மனித கணிப்பு. சுயநீதிச் சலனத்தால் வரும் எண்ணம் இது! நல்லவன் மட்டும் வாழ்வதானால் மற்றவர் கதி என்ன? கடவுள் பார்வையில் ஒருவரும் நல்லவர் இல்லை. ஆனால் தன்னை நல்லவன் என்று எண்ணும் ஒருவன், `நான் ஏன் துன்பப்படுகிறேன். வேறே எல்லாரும் நன்றாக வாழ்கின்றனரே…. குறிப்பாய் எவ்வளவோ மோசமானவர்களும் வாழ்கின்றனரே’ என்று சலசலக்கின்றான்.
இப்படிப்பட்டவரிடம், `நான் துன்புறக் கூடாது. வேறு எவர் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது! `நான் யோக்கியன், என்னைவிட பல அயோக்கியர் இருக்கின்றனர். இவர்கள் தண்டிக்கப்படவில்லையே….ஏன்?’ என்று கடவுளிடம் இப்படிப்பட்டவர்கள் கேள்வி கேட்கின்றனர். கடவுள் எல்லாருக்கும் ஆண்டவர்! யாவரையும், தீயவரையும் கூட கடவுள் நேசிக்கிறார். தீயவர், மனந்திருந்தி வாழ்ந்திடக் கடவுள் காத்திருக்கிறார். பொல்லாதாரும் மனம் திருந்தக் கடவுள் வாய்ப்பு கொடுக்கிறார். கடவுளின் மன்னிக்கிற கிருபை மனித இனத்திற்குத் தேவை. தண்டிக்கிறவராக, கடவுள் இருந்தால், இந்த தியானத்தை எழுதிய நானும், படிக்கிற நீங்களும் மீந்திருக்க முடியாது. ஆகவே, எனக்குக் கிடைத்தது போல மன்னிப்பு, கடவுளால் எல்லாருக்கும் சொந்தமாக்கப்பட்டுள்ளது! பாவியில் `சிறிய பாவி-பெரிய பாவி’ என்று நாம் பேதம் காணவேண்டாம்.
இயேசுவின் சிலுவை மரணம் யோபுவின் கேள்விக்கு விடையாகிவிட்டது. பொல்லாதவரின் பாவத்தையும் இயேசு சுமந்தார். நோயாளிக்குத்தான் வைத்தியம் தேவை. பொல்லாதவருக்குத்தான் அதிகம் மன்னிப்பு தேவை. என்னை மன்னிக்கிறார் கர்த்தர்! பொல்லாதவரையும் மன்னிக்கிறார் கர்த்தர். பொறாமையால் நம் மனங்கள் சலனப்படவேண்டாம்.
பொல்லாதவர் வாழ்வு கண்டு பொறாமைப்படுகிறேன் கர்த்தாவே. என்னைப் போல பிறரும் மன்னிக்கப்படுகிறார்கள் என்ற மனச் சந்தோஷத்iதை எனக்குத் தாரும். பொல்லாதவர் மனந்திருந்துவதற்காக ஜெபிக்கிற சலனமற்ற மனம் தாரும். இயேசு வழியே. ஆமேன்.
