ஆதியாகமம் 27 : 41-43 24 செப்டெம்பர் 2019, செவ்வாய்
“…என் சகோதரன் யாக்கோபைக் கொன்று போடுவேன் என்று ஏசா தனக்குள் சொல்லிக் கொண்டான்.” – ஆதியாகமம் 27 : 41
பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும், பின் கசக்கும், எய்தவனை திருப்பி வந்து கொல்லும் என்கிறார் புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் ஜாண் மில்ட்டன். குடும்பத்தில் உள்ள சகோதர பகை குடும்பத்தில் வேதனையையும், சமாதானம் இல்லா சூழ்நிலையையும் அதிகரிக்கச் செய்யும். மறத்தலாலும் மன்னிப்பதாலும் மட்டுமே குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையும்.
யாக்கோபு தன்னுடைய சகோதரன் ஏசாவை ஏமாற்றினார். ஏசாவின் செல்வத்தை தனதாக்கி தலைமறைவாய் வாழ்ந்தார். யாக்கோபு தன்னுடைய சகோதரன் ஏசா தன்னை கொல்ல வருகிறான் என்று கேள்விப்பட்டு மனக்கலக்கம் அடைந்தார். தன் சகோதரனை சமாதானப்படுத்த தன் அறிவு கொண்டு திட்டம் போட்டார். பரிசு பொருட்களை சகோதரனுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். ஆனாலும் பயம் குறையவில்லை. இறுதியில் கடவுளின் துணையை நாடினார். கடவுள் யாக்கோபை சந்தித்து ஆசீர்வதித்தார். ஏசா-யாக்கோபு சந்திப்பு நிகழ்ந்தது. யாக்கோபு அஞ்சியது போல் ஏசா அவரைத் தாழ்த்தி அவரின் செல்வத்தை அழிக்க வரவில்லை. மாறாக ஏசாவே அவருக்கு எதிர்கொண்டு ஓடி அவனை அரவணைத்து இறுக்க கட்டித் தழுவி முத்தம் இட்டார். சினத்தை குறைப்பதற்காக கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்களை ஏசா ஏற்றுக் கொள்ளவில்லை. வற்புறுத்தலினால் யாக்கோபின் பரிசுகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டார். யாக்கோபு `இரண்டாவது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பது போல் இருக்கிறது.’ ஏனெனில் நீர் எனக்கு கனிவு காட்டி உள்ளீர் என்கிறார் அவர்.
கடவுளின் முகம் சகோதரன் முகத்தில் பார்க்கப்படுகிறது. இதுதான் உண்மையான இறையாசி. சொத்துக்களுக்காக சண்டை போடாமல் வீணான வீம்புகளுடன், மனதில் பகை உணர்வுகளுடன் வாழாமல் சகோதரர்கள் ஏற்படுத்திய காயங்களை ஏசாவைப் போல் மறந்து மன்னித்து வாழ்வோம். யாக்கோபை போல சகோதரர்களில் கடவுளின் முகம் காண்போம். குடும்ப வாழ்வு ஆசீர்வாதமாய் அமையும்.
சமாதானம் அருளும் கடவுளே! சகோதரர்களின் தவறுகளை மறந்து மன்னித்து உமது முகத்தை சகோதரர்களில் காண செய்தருளும். கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே. ஆமேன்.
