கலாத்தியர் 6 : 1-5 17 செப்டெம்பர் 2019, செவ்வாய்
“…உன் சகோதரன் பாவஞ்செய்தால் அவனைக் கண்டித்துப் பேசு….” – லூக்கா 17 : 3
நம்முடைய அன்பு உண்மையற்றதாக, சுயநலம் மிக்கதாக இருக்கிறது. இப்படி தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சகோதரன் பாவம் செய்தால் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறோம். நமக்கு ஏன் வம்பு. ஒரு வேளை உறவு முறிந்து விடக்கூடும் என்ற சுயநல எண்ணம் காரணமாக நம்மை மட்டுமே சிந்திக்கிறது நம் மனம். சகோதரனுடைய பாவம் அவனை பாதிக்கும், அவனை நல்வழி படுத்த வேண்டும் என்ற உண்மையான அன்பு இல்லாமல் வாழுகிறோம்.
இயேசு கிறிஸ்து ஏழு எழுபது முறை மன்னிக்கக் கூறும்போது மன்னித்தல் எல்லை அற்றதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். யூத மரபில் ஒருவர் பிறருடைய குற்றங்களை மூன்று முறை மன்னிக்க வேண்டும். இது முழுமையின் அடையாளம் என்று எண்ணினார்கள். கிறிஸ்து இந்த எண்ணத்தை தகர்த்து மன்னித்து அன்பு செய்தல் எல்லையற்றதாக இருக்க வேண்டுமென்று கூறுகிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கை ஆபத்து நிறைந்த பாதையில் பயணிப்பது தான். சமூகத்தில் சறுக்கல் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் ஏராளம் உண்டு. மறுபடியும் இத்தகைய மக்களை தூக்கி நிற்க வைப்பது கிறிஸ்தவர்களின் கடமையாய் இருக்கிறது. மறப்பதாலும் மன்னிப்பதாலும் மட்டுமே இது சாத்தியமாகும். சகோதரனின் பாவத்தைக் கண்டித்து பேசுதல் அவனை குற்றப்படுத்துவதற்காக அல்ல. அவன் மனம்மாறி புதுப்பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக அமைய வேண்டும். அவமானப்படுத்தவோ, காயத்தை அதிகரிக்கச் செய்வதோ நோக்கமாக இருக்கக் கூடாது. பாவிகளுக்காக இயேசு தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்து அவர்களில் அதிகமாக அன்பு செய்து நமக்கு முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிறார். நாமும் இயேசுவின் மாதிரியை பின்பற்றி பாவம் செய்கிற சகோதரர்களுக்கு மன்னித்து அவர்களில் அன்பு கூர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துவோம். ஏனெனில் நமக்கு சகோதரர்களை அல்லது சகோதரிகளை ஆண்டவர் கொடுத்ததற்கு ஒரு நோக்கம் இருக்குமே. கடவுளால் தரப்பட்ட உறவுகளை, உடன்பிறந்தவர்களை நேசித்து, அனுசரித்து இறையவரோடு வாழ அவர்களை ஊக்கப்படுத்துவோம்.
அன்பான கடவுளே! அன்பினால் பிறரைக் கடிந்து கொள்ளும் மனநிலையைத் தாரும். பிறர் நலன்களுக்காக தவறுகளை சுட்டிகாட்டும் மனவலிமையைத் தாரும். பிறரை நல்வழிப்படுத்தும் கரிசனையை தாரும். உம்மில் மன்னிப்பைப் பெற்ற நாங்கள் பிறருக்கு மன்னிக்க உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.
