எபேசியர் 6 : 1-4 12 செப்டெம்பர் 2019, வியாழன்
“…நீ உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணவேண்டும்….” – உபாகமம் 5 : 16
கடவுள் மனிதனை தம்முடைய சாயலாகப் படைத்தார். அவன் கடவுளுக்கும் சமூகத்திற்கும் ஏற்புடையவனாக வாழுவதற்கு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். நியாயப் பிரமாணத்தை அவன் இருதயத்தில் எழுதினார். மனுக்குலம் பலுகிப் பெருகினபோது கடவுள் சில சட்ட திட்டங்களை இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். கற்பனைகளின் நோக்கமே மனுக்குல வாழ்வுதான். மனிதன் இவ்வுலகில் நீடித்த நாட்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்கு கடவுள் தாம் கொடுத்த கற்பனைகளில் வழி சொல்லியிருக்கிறார். அதுவே நமது தியானப் பகுதி. `நீ உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணவேண்டும்’ என்று சொல்லாமல் அப்படி கனம் பண்ணினால் உன் கடவுளாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்தில் நீ நெடுநாளிலிருந்து வாழ்வடைவாய் என்கிறார்.
பவுலடிகளார் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் `நீ நன்றாயிருப்பதற்கும், பூமியில் நீ நெடுநாள் இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டுமென்பதே வாக்குத்தத்தத்தோடு கூடிய, முதல் கற்பனை’ என்று எழுதுகிறார். இந்தக் கற்பனை வழியாக பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தைச் சொல்லுகிறார். நம்மைப் பெற்று வளர்க்கிற பெற்றோருக்குத் தான் நமக்கு எது தேவை, எப்போது தேவை என்பது தெரியும். குழந்தைகளாய் நாம் நம் விருப்பப்படி வாழ்ந்தால் நம் வாழ்வையே இழக்க நேரிடும்.
பிள்ளைகள் கடவுள் அருளும் ஈவு. அவர்களை கடவுளுக்கேற்ற பிள்ளைகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமை. எனவே தான் பவுலடிகளார் ஆண்டவருக்குள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பிள்ளைகளை கடவுள் அருளுகிறார். இந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்லுகிற செய்கிற காரியங்கள் நம் வாழ்வுக்கானவை என்பதை முழுமையாக நம்பவேண்டும். அவர்களுக்கு கீழ்படிய வேண்டும். அதே வேளையில் பெற்றோர் பிள்ளைகளை கோபப்படுத்தாமல் வளர்க்க வேண்டும். தவறு செய்யும் போது தண்டிக்க வேண்டும், எச்சரிக்கவேண்டும். இவை பிள்ளைகளின் மீது கொண்ட கரிசனையில், அன்பில் அமைய வேண்டும். பிள்ளைகளே வருங்கால குடும்பம், சமூகம், திருச்சபை ஆகியவற்றின் தூண்கள். எனவே அவர்கள் கடவுளையே நம்பி அவரைச் சார்ந்து வாழ இறையவர் வலியுறுத்துகிறார். இறை வார்த்தையில் பிள்ளைகளை வளர்ப்போம். நாட்டின் நல்ல குடிமக்களாக மாற்றுவோம். பிள்ளைகளைக் கொண்டு புது சமூகத்தை படைக்க உறுதி ஏற்போம்.
அன்பின் கடவுளே! நீர் தந்த எங்கள் பிள்ளைகளுக்காக நன்றி. அவர்களை நல்ல குடிமக்களாக விசுவாசிகளாக மாற்ற எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
