2 சாமுவேல் 7 : 8-11 06 செப்டெம்பர் 2019, வெள்ளி
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா…” – சங்கீதம் 127 : 1
மனிதர்கள் அனுபவங்கள் வழியாக பாடங்கற்றுக் கொள்ளுகிறார்கள். அனுபவங்கள் ஆலோசனைகளாக வெளிவருவது இயல்பு.
தாவீது இஸ்ரவேலின் இரண்டாம் அரசன். தான் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டதே கடவுளின் கிருபை என்பதை அறிந்திருந்தார். கோலியாத்தை வெற்றி கண்டது தன் திறமை அல்ல. கடவுள் அருளிய வெற்றி என்பது கோலியாத்தோடு பேசிய பேச்சுகள் காட்டின. தாவீது சந்தித்த யுத்தங்களில் கிடைத்த வெற்றிகளும் தன் சாமர்த்தியத்தால் அல்ல என்பது தாவீதுக்குத் தெரியும். தாவீது எருசலேமை தலை நகராக்கினார். தீரு அரசன் உதவியோடு தனக்கு அழகிய அரண்மனையை கட்டினார். பட்டணத்தை அழகுபடுத்தினார். கடவுளின் பெட்டகம் கூடாரத்தில் இருந்தது. இதனால் கடவுளுக்கு அழகிய ஆலயம் கட்ட விரும்பினார். பெட்டகம் கூடாரத்தில் இருப்பது தாவீதுக்கு குறையாக தோன்றியது. எனவே நாத்தான் தீர்க்கரை அழைத்து ஆலயம் கட்டுகிற திட்டத்தை விவரித்தார். நாத்தான் தீர்கன் இசைவளித்தார். ஆனால் கடவுள் இத்திட்டத்தை தடுத்தார். பின் நாளில் தாவீதின் மகன் சாலமோன் வழியாக அதை செயல்படுத்தினார்.
கடவுள் தன் வாழ்வில் நடப்பித்த ஒவ்வொரு செயல்களையும் ஆய்ந்தறிந்தார் தாவீது. எல்லாவற்றையும் செம்மையும் அழகுமாய் நிறைவேற்றிய கடவுளுக்கு ஒரு நோக்கம் இருக்கும் என்பதை தாவீது அறிந்து கொண்டார். எனவே தான் ஆலயம் கட்ட தேவையான எல்லா பொருட்களையும், பொன்னையும் கூட சேர்த்து வைத்தார். தாவீதின் இந்த மனதை அறிந்த கடவுள் அவன் என் வீட்டைக் கட்ட விரும்பியதால் நான் அவன் வீட்டைக் கட்டுவேன் என்று வாக்களித்தார்.
நம்முடைய குடும்பம் உறவுகள் பிள்ளைகள் அனைத்தும் கடவுள் அருளும் ஈவு. அதுபோலவே நம் வாழ்வு, கைகளின் பிரயாசம் அனைத்தும் கடவுள் அருளுபவை. நம் பாதுகாப்பு, பராமரிப்பு அனைத்தும் கடவுள் அருளும் ஆசீர்வாதம். இதை உணர்ந்த தாவீது கர்த்தர் வீட்டைக் கட்டாவிட்டால் அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா என்று தீர்க்கமாகச் சொல்லுகிறார். சிலர் வீடுகட்ட விரும்புகிறார்கள். ஆனால் கட்ட முடியவில்லை. சிலர் வீடுகட்ட ஆரம்பிக்கிறார்கள் ஆனால் முடிக்க முடியவில்லை. சிலர் வீடு கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதில் வாழ முடியவில்லை. இது வீட்டை கட்டுவதில் மட்டுமல்ல வாழ்வில் ஒவ்வொரு துறைக்கும் பொருந்தும். கடவுளின் ஆசீர்வாதம் இல்லை என்றால் மனித முயற்சிகள் வீணாகும். நாம் எப்பொழுதும் கடவுளையே சார்ந்து நிற்போம். அவர் அருளைத் தேடி அவர் பாதத்தில் அமர்ந்து அவர் சித்தத்தை அறிய முற்படுவோம். அவர் சித்தத்திற்கு கீழ்படிந்து வாழுவோம்.
எல்லாவற்றையும் வாய்க்கப் பண்ணும் கடவுளே, உம் சித்தத்தை அறிந்து எங்கள் காரியங்களை ஆரம்பிக்கவும் நிறைவு செய்யவும் வழி நடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
