அப்போஸ்தலர் 18 : 18-23 24 ஜூலை, 2019 புதன்
“பவுலோ….தனக்குப் பொருத்தனை இருந்தபடியால்…. தலைச் சவரம்பண்ணிக் கொண்டு…” – அப்போஸ்தலர் 18 : 18
பவுலின் தலைச்சவரம் பற்றி வாசிக்கின்ற போது ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருச்சபைப் போதகர் ஒருவருக்கு இளமைப்பெயர் `நாகராஜன்’! அவரது குடும்பத்தினருக்கு, குலதெய்வத்திற்கு வருடந்தோறும் பொருத்தனை செய்து, மொட்டையடிப்பது என்பது வழக்கமாக இருந்தது. தலைச்சவரம் என்பது பழமை வாய்ந்தது. மேலும் அது இஸ்ரேல் தேசத்திலிருந்து இறக்குமதியான ஆன்மீகப் பழக்கம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. மொட்டையடிக்கிற பொருத்தனை பற்றி விசாரிக்கிறவர்களிடம் `இந்த நோக்கத்திற்காக மொட்டை போட்டேன்’ என்று `சாட்சி சொல்ல’ இது உதவுகிறது.
பவுல் கெங்கிரேயா எனும் இடத்தில் மொட்டை போட்டுக் கொண்டார். இதற்கு ஒரு காரணம் இருந்தது. கொரிந்து, மக்கதோனியா, எபேசு போன்ற இடங்களில் இயேசுவே கிறிஸ்து-மேசியா என்று யூதருக்கு வற்புறுத்திக் கூறினார். வாக்குவாதம் வலுத்தது. தர்க்கம் செய்ய வேண்டியதாயிற்று. இந்த யூதருக்கு முன்பு தன்னை ஓர் யூதன் என்று பவுல் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யூத கலாச்சாரப் பின்னணியில், `பொருத்தனை மொட்டை’ போட்டுக்கொண்டது பவுலின் சுவிசேஷ வேலைக்கு உதவியது எனலாம். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பவுல் யூத மொட்டை போடலாமா? கிறிஸ்துவைப் பிரசங்கித்த பவுல், யூத ஒழுக்கத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பின்பற்றலாமா?
கிறிஸ்துவுக்காக, `எல்லாருக்கும் எல்லாம்’ ஆனவர் பவுல் என்று அறிவோம். நமது வாழ்க்கைச் சூழலில், விசுவாசத்திற்கு முரண்படாத, சேதம் வருவிக்காத சில பண்பாட்டு ஒழுக்கங்களை ஞானத்தோடு கடைபிடிக்க இந்தச் சம்பவம் `ஒரு வேத அனுமதி’ என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். கடினமான சிந்தனை இது. குறை சொல்லாமல் இருக்க முடியாது! இந்த `அனுமதி’ கிடைத்ததால் எப்படியும் வாழுவேன் என்றும் சொல்ல முடியாது. நமது வாழ்வையே பொருத்தனைப் பொருளாக்குவோம். அதுவே மிகச் சிறந்த பொருத்தனையாகும்.
தூயாதி தூயவரே! மேலோட்டமாக அல்ல இதயத்தையே பொருத்தனையாகப் படைக்க அருள்தாரும். பண்பாடு, சலாச்சாரப் பின்னணியப் பழக்கவழக்கங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தும் ஞானம் தாரும். மீட்பர் பெயரில் ஆமேன்.
