சங்கீதம் 22 : 24-26                                    23 ஜூலை, 2019 செவ்வாய்

“…அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.” – சங்கீதம் 22 : 25

பொருத்தனை செலுத்தினால்தான், இறைவன் ஆசீர்வதிப்பாரா? இறை ஆசிபெற, இறைவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமா? கேள்விகளுக்கு `ஆம்’ என்று விடை கொடுத்தால் இறைவன் ஓர் ஊழல் பேர்வழி எனலாம். பொருத்தனையை நாம் இறைவனுக்குப் படைக்கிறோம். பொருத்தனை செய்வது விசுவாசியின் விருப்பம். அதை இறை பயம் கொண்டவர்களுக்கு முன்பாக, ஊழியர் முன்பாக செலுத்துவதில் எந்தவிதத் தவறுமில்லை. பொருத்தனைச் செயல்கள் பலருக்கு ஒரு முன் மாதிரியும் ஆகிறது. விசுவாசிகளின் கூடுகையில் பொருத்தனை செலுத்துவது பலருக்கு ஆசீர்வாதமாகும்.

இறைவன் எளியவரின் குரல் கேட்கிறார். நம்முடைய துயர வாழ்விலிருந்து தெய்வத்தை நோக்கி முறையிடுகையில், ஏதாவது ஒரு வகையில் அவருடைய சித்தத்திற்கிசையக் கடவுள் கைதூக்கிட முன் வருகிறார். அன்னாளின் விசுவாச மனம் கண்டு தீர்க்கதரிசி சாமுவேலின் வழியே தேவன் வாக்குறுதி தந்தார். ஆகாரின் கண்ணீர் துளிகளுக்குப் பதிலாகத் தேவன் தண்ணீர் தந்தார். நம் வாழ்வு முள்ளில் சிக்கிய மலர் போல் இருக்கையில், இறைவனை நோக்கிக் கெஞ்சுகையில் நம் குரல் பரலோகக் கதவைத் தட்டும் என்பது உறுதி.

இறைவன் நமக்குப் பதில் தருவார், மற்றவர்கள் சிரிக்கும்படி விடமாட்டார், வெட்கப்படுத்த மாட்டார். காரணம், நம் எளிய பொருத்தனைகளை அவர் ஏற்கிறார். அது நமக்கு இன்பமே! சிறுமைப்பட்டவர்கள் – திருப்தியடைவர்! கர்த்தரைத் தேடுகிறவர்கள்-திருப்தியாவார்கள்! இந்த உண்மைகளின் மற்றொரு பார்வைக்கோணம், சிறுமையானவன்-பொருத்தனை செலுத்துகிறவன் என்பது! `என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்’ என்று திருக்கவிஞர் தாவீது எழுதினார். சிறுமையானவனின் சிறுமையைக் கடவுள் அற்பமாய் எண்ணவில்லை. அருவருக்கவுமில்லை, தமது முகத்தை மறைக்கவுமில்லை’ என்ற காரண காரியங்களைச் சொல்லிவிட்டுப் பொருத்தனைகளைச் செலுத்துவேன் என்றார் தாவீது.

பொருத்தனை செய்து அதை உடனுக்குடன் நிறைவேற்றுவது நல்லதொரு முன் மாதிரி. சிறுமைப்பட்டவரின் மகிழ்ச்சி பொருத்தனை செய்தலில் வெளிப்படும். ஆனால் அதையே பெருமையாக்கிவிடக் கூடாது. பொருத்தனை செய்வோம். அதை இறை பயம் உள்ளவர் முன்பாக படைப்போம். அது தற்பெருமைக்கல்ல, பரம்பொருள் தந்தவற்றின் நன்றி உணர்வாகப் படைப்போம். அப்போது தெய்வீக பிரசன்னம் நமது வாழ்வில் பூரணமாகும்.

ஏழைக்கு இரங்கும் கர்த்தாவே! உமக்குப் பயப்படும் பிள்ளைகள் முன் பொருத்தனைகளைப் படைக்கிற மனம் தாரும். என்னையும் என் பொருத்தனைகளையும் ஏற்றருளும். இயேசுவின் வழியே ஆமேன்.