யாத்திராகமம் 3 : 1-11                                           4 ஏப்ரல், 2019 வியாழன்

“சகலவித வேலைகளையும் செய்வதற்கு வேண்டிய அறிவும்…. உண்டாகும்படி கடவுளின் ஆவியினால் அவனை நிரப்பினேன்.” – யாத்திராகமம் 31 : 3

ஒரு காலத்தில் வீடு கட்ட வேண்டுமெனில் கொத்தனாரைப் பார்க்க வேண்டும், ஆசாரியைத் தேடவேண்டும். மின்சார வேலைக்கு வேறொருவரைத் தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருவரைத் தேடித்தான் வேலையை முடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படி அல்ல எல்லா வேலைகளையும் ஒருங்கிணைத்து செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். சொன்னால் போதும். வேலை அனைத்தும் முடிந்து வீடு தயாராகி விடும்.

இஸ்ரவேலர் தங்களுக்கென்று ஆலயம் கட்டப்படும் வரை இறைவனைத் தொழ ஒரு வேலைப்பாடு நிறைந்த கூடாரத்தை செய்துகொள்ள கடவுளிடமிருந்து கட்டளை பெற்றனர். அதன் வடிவம், அமைப்பு, கலை சிற்பங்கள், வேலைப்பாடு நிறைந்த திரைச் சீலைகள் போன்றவற்றை அமைக்க தகுதியான ஆட்களை எதிர்பார்த்தனர். அதற்கும் கடவுளே ஏற்பாடு செய்தார். அவர் இஸ்ரவேலரை வழிநடத்திய மோசேயிடம், பெசலேல் என்பவரை சுட்டிக் காட்டினார். அவர் சகலவித வேலைகளையும் செய்யும் அறிவும் திறமையும் வாய்ந்தவர் என்று கூறினார்.

கடவுள் சொன்னபடியே மோசே பெசலேல் என்பவரை திரைக் கூடாரம் செய்ய ஏற்பாடு செய்தார். அவரும் குறித்த நாட்களில் செய்து முடித்தார். பெசலேல் சகல வேலைகளை செய்யும் திறமைகளை எவ்வாறு பெற்றார் என்பதை தியானப் பகுதி விளக்குகிறது. கடவுள் தம் ஆவியினால் அவனை நிரப்பி அறிவையும் திறமையையும் கொடுத்தார். கடவுளின் ஆசியாலும் அருளாலும் அவர் அத்திறமைகளைப் பெற்று பணியாற்றினார்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் திறமைகளையும் கலையாற்றலையும் அருளுகிறார். நம்மில் பலர் பல துறைகளில் வல்லுநர்களாக விளங்குவது கடவுள் நமக்கு தந்த திறமைகளாலே ஆகும். இத்திறமைகளைக் கொண்டு நாம் பணம், புகழ் வாழ்வுக்குத் தேவையான வசதிகளைச் சம்பாதிப்பது தவறல்ல. அதே சமயம் இத்திறமைகள் இறைவனின் ஆலயத்திற்கென்றும் அவர் பணிக்கென்றும் பயன்படட்டும். நமது வளங்களின் முதல் பயன்பாடு அதுவாகவே இருக்கவேண்டும். இறைவனிடம் பெற்றதை இறைவனுக்கென்று பயன்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு. அதன் வழியே கடவுளை மகிமைப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல கடவுளே! நீர் எமக்குத் தரும் நல்ல திறமைகளையும் வரங்களையும் உமது ஆலயத்தின் வளர்ச்சிக்கென்றும் உமது பணிக்கென்று பயன்படுத்தத் துணை புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.