1 கொரிந்தியர் 7 : 1-7                                  29 மார்ச், 2019 வெள்ளி

ஜெபத்திற்கு வசதியாயிருக்கும்படி,….. மறுபடியும் கூடி வாழுங்கள்.” – 1 கொரிந்தியர் 7 : 5

ஆதித் திருச்சபையின் முக்கிய குணாதிசயங்களில் ஜெபமும் ஒன்று. ஒருமனப்பட்டு அனைவரும் ஜெபிக்கும் வழக்கம் சபையாருக்கு இருந்தது. அதற்கு இடையூறாக இருக்கும் அனைத்தையும் விலக்கி வைத்தனர். ஒரு மனப்பட்டு முழு இருதயத்தோடு ஜெபிப்பதில் கணவன் மனைவி சேர்ந்திருப்பதும் ஒரு தடையாக கருதப்பட்டது. அவர்கள் சேர்ந்திருப்பதை தடையாக கருதியதால் அக்காலங்களில் பிரிந்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர்.

இந்த வழக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற ஆபத்தை பவுல் புரிந்து கொண்டார். ஏனெனில் கொரிந்து நகரில் விபச்சாரமும் வேசித்தனமும் மக்களிடையே சர்வ சாதாரணமாக இருந்தன. வாய்ப்புகள் ஏற்படும் போது எவருமே இத்தீய காரியத்திற்கு தப்ப இயலாது. சாத்தான் தனிமையாயிருக்கிறவர்களையே அதிகம் சோதிப்பான். ஏதேன் தோட்டத்தில் தனிமையாக இருந்த ஏவாளை சோதித்து முழு மனுக்குலமும் பாவத்தில் விழ காரணமானானே. வீடுகளில் தனித்திருக்கும் பெண்களை தடம் புரளச் செய்யும் சோதனைகள் இக்காலத்திலும் உள்ளனவே. தனிமை ஆணையோ, பெண்ணையோ தவறு செய்ய தூண்டிவிடக்கூடாது என்று பவுல் பயந்தார். எனவே இச்சையடக்கம் இல்லாதவர்கள் பிரிந்து இருக்க கூடாது; அவர்கள் சேர்ந்தே இருக்கவேண்டும். சேர்ந்தே ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

கணவன் மனைவியைச் சேர்த்து வைத்தவர் கடவுள். திருமணத்தின் போது கடவுள் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்க கடவன் என்று போதகர் கூறுவார். விபச்சாரம், வேசித்தன பாவங்கள் இவர்களை நிச்சயம் பிரிக்கும். எனவே இவை குடும்பத்திற்குள் நுழைந்து விடாதபடி நாம் எச்சரிக்கையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

குடும்பத்தில் பெண்களை தனியாக வழியனுப்பவதில், வாழச் செய்வதில் கவனம் தேவை. ஜெபம், உபவாசக்கூட்டம் என்று தெருத்தெருவாக சரியான பாதுகாப்பின்றி போகாதபடி எச்சரிக்கையோடு வாழ்வோம். ஊழியர்கள்கூட இக்காலத்தில் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கூற முடியாது. குடும்பத்தை குறித்த எச்சரிக்கையோடு ஜெபங்களில் நிலைத்திருப்போம். ஆண்டவர் தாமே நமது குடும்பங்களை காத்து நடத்தட்டும். இச்சையோடு பார்க்கிறவர்களை இறையவரே கட்டுப்படுத்தட்டும்.

பாதுகாப்பின் கடவுளே! எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும். குடும்ப உறுப்பினர்களின் தனிமையை பயன்படுத்தி சாத்தானின் தீமையை குடும்பத்திற்குள் புகுத்தாதபடி எங்களை காத்தருளும். கணவன் மனைவி எப்போதும் சேர்ந்தே வாழ துணைபுரியும். இயேசுவின் வழியே  ஆமேன்.