யோவேல் 2 : 12-18                                         26 மார்ச், 2019 செவ்வாய்

இப்பொழுதும் நீங்கள் உபவாசித்து அழுது புலம்பி…. என்னிடத்தில் திரும்புங்கள்…” – யோவேல் 2 : 12

ஆலயத்திற்கு வராத ஒருவரை கண்டு ஏன் வரவில்லை என்றேன். வெறுங்கையாய் வர மனம் இடந்தரவில்லை என்றான். இன்னொருவனிடம் ஏன் திருவிருந்து எடுக்கவில்லை என கேட்டேன். காணிக்கை இல்லை என்றான். நம்மில் பலர் ஆலயம் வராதிருப்பதற்கு பல காரணங்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவைகளெல்லாம் சாக்குபோக்குகளேயொழிய வேறில்லை.

எனக்கு சரியான ஆடை இல்லை. காணிக்கை செலுத்த பணமில்லை என்றெல்லாம் கூறும் நாம் இவற்றைத் தருபவர் கடவுள் என்பதை மறந்து போகிறோம். நாம் தேட வேண்டியவர் நமது கடவுளே. முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தை தேடுங்கள். பின்னர் நாம் நமக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.

யோவேல் தீர்க்கத்தரிசியின் காலத்தில் மக்கள் ஆலயத்தையும் அதில் செய்யப்பட வேண்டிய பலியையும் மறந்து போயினர். உபவாசம் போன்ற சமய கடமைகளும் அவர்கள் வாழ்வில் இல்லை. முதலாவது அத்தகைய சமயக் கடமைகளை ஏற்படுத்த வழிவகை செய்த யோவேல் இப்போது உபவாசித்து கர்த்தரிடம் திரும்ப அழைக்கிறார். அவர் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய பலிக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை அருள்வார் என்கிறார். நமது ஆசீர்வாதங்களுக்குத் தடையாக இருப்பது நமது பாவங்களே. இவை நம்மேல் கடவுளின் கோபத்தையே கொண்டு வருகிறது. அவர் கோபத்துக்குத் தப்ப ஒரே வழி அவர் பாதத்தில் சரணடைவதுதான். நம்மை ஒடுக்கி, உபவாசித்து அவரிடம் திரும்புவோம். அவர் நமக்கு மன்னிப்பையும் இதர ஆசீர்வாதங்களையும் அருள்வார்.

நமக்கு துன்பங்களைத் தருவது அவர் நோக்கமல்ல. ஆனால் நெருக்கத்தை தந்து விடுதலையையும் தந்து `நானே கர்த்தர் என்பதை நாமறியச் செய்கிறார். அவரிடமே திரும்புவோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் தேவைகளை நிறைவேற்ற எங்கெல்லாமோ செல்கிறோம். ஆனால் உம்மைத் தேடுவதில்லை. இது எங்களில் காணப்படும் குறைபாடே. இதை நீக்கி எப்போதும் உம்மை ஜெபத்திலும் உபவாசத்திலும் தேடி உமது ஆசியை பெற துணை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.