யோவான் 14 : 7-11 30 ஏப்ரல், 2018 திங்கள்
“மாண்ட மானிடன் மீண்டும் பிழைப்பதுண்டோ? பிழைத்தால்… நாளெல்லாம் காத்திருப்பேன்.” – யோபு 14 : 14
யோபு தன் சொத்துக்களை இழந்தான், பிள்ளைகளை இழந்தான். அவனுடைய உடல் அவனுக்கு எதிரியானது. மனைவியும் அவனைப் பழித்தாள், இந்நிலையில் மரணமே ஆசீர்வாதமான நிலைபோலாயிற்று. கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்று கூறிய யோபு பின்னால், `நான் பிறந்த நாள் அழிவதாக’ என்று கூறி சஞ்சலமடைந்தான். நண்பர்களின் ஆலோசனைகள் புத்திமதிகள் அவனை விரக்தியுடையவனாக்கின. மரணத்தை எதிர்பார்த்து நிற்கின்றான், கடவுளே, மனமுவந்து தன்னை அழித்துவிட வேண்டுமென விரும்பினான். உயிரை வெறுத்தான், மரணம் அவனை நெருங்கிற்று என்று நம்பினான். என்றாலும் ஒருநாள் தான் உயிரோடு எழுவோம் என்ற நம்பிக்கையுமிருந்தது. கடவுளின் பிரசன்னத்திலிருந்து அவன் என்றென்றும் அகன்று போக முடியாது என்ற நம்பிக்கையும் இருந்தது.
மாண்ட மனிதன் மீண்டும் பிழைப்பான், தனக்கும் ஒரு நாள் விடுதலைவரும். நோயிலிருந்து மரணத்தின் மூலமாக – மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் வழியாக விடுதலை வருமளவும் போர்ச்சேவை செய்து கொண்டு நான் காத்திருப்பேன் என்று கூறுகிறார்.
மனிதனுக்கு எத்தனை பெரிய துன்பம் ஏற்பட்டாலும், அவன் கடவுளைப் பற்றிக்கொண்டிருக்க முடியும். ஏனென்றால் கடவுள் எந்த மனிதனையும் கைவிடுவதில்லை. துன்பங்களிலிருந்து விடுதலையளிக்கும் கடவுள் நாம் எதிர்பார்க்கும் விதத்தில், முறையில் விடுதலையருள வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். ஆகவே ஏமாற்றமடைகிறோம். ஆயினும், கடவுள் தமது சித்தத்திற்கிசைய நமக்கு விடுதலையைக் கொடுக்கிறார்.
ஆனால் கடவுள் அருளும் விடுதலை அற்புதமானது அதிசயமானது. துன்பங்களிலிருந்து, பாவத்திலிருந்து இயேசு அருளும் விடுதலையைப் பெற்றவர்களாய் வெற்றி வாழ்க்கை வாழ்வோம்.
விடுதலை வீரரான கடவுளே, இயேசுவின் மூலம் நாங்கள் பெற்ற விடுதலையின் மேன்மையை உணர்ந்து வாழ எங்களுக்குத் துணை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.
