தீத்து 1 : 1,2                                                                  4 அக்டோபர், 2017 புதன்

“தீத்து யாரென்றால் அவன் எனக்குக் கூட்டாளி, … கிறிஸ்துவின் மகிமை” – 2 கொரிந்தியர் 8 : 23

நாம் நமது குணத்திற்கேற்ற நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். ஒத்த மனம், ஒத்த வயது, ஒத்த சுவை, ஒத்த தொழில், ஒரே இனம் போன்றவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளை அமைத்துக் கொள்கிறோம். பவுல் நண்பனாகிய தீத்துவைப் பற்றிக் கூறுகிறார். தீத்து ஒரு விசுவாசி பிற இனத்தை சார்ந்தவர். பவுலுடன் மூன்றாம் பிரயாணத்தில் உடன் இருந்தவர், கிரேத்தா தீவின் ஆயர், சபைகள் இவரால் வளர்ச்சி அடைந்தன. மேலும் எல்லாராலும் புகழப்பட்டவர். வழித் துணையானவர், ஊக்கமுள்ளவர், இளைஞன், உடன் ஊழியன், கடவுளின் மகிமை எனக் குறிப்பிடுகிறார்.

நண்பனில்லாத வாழ்வு குறைவுள்ள வாழ்வு. மனித வாழ்வு, வளர்ச்சி, உதவிக்கு நண்பர்கள் தேவை. என் நண்பன் நல்லவனாக இருந்தால், என் வாழ்வும் செயல்களும் நன்றாக இருக்கும். நான் தெரிந்தெடுத்த நண்பன் கெட்டவனாக இருந்தால் என் வாழ்வும் செயல்களும் கெட்டதாக இருக்கும். உன் நண்பனைச் சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்லுகிறேன் என்பது பழமொழி. திருமறையில் கடவுள் ஆதாமோடு, இளங்காற்று வீசின வேளையில் நண்பனோடு பேசுவது போல உறவாடினார். இஸ்ரவேல் மக்களுக்கு நல்ல நண்பனாயிருந்து விடுவித்து, வழிநடத்தி, போஷித்து, பாதுகாத்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானைக் கொடுத்தார்.  யோனத்தானும் தாவீதும் உயிரைக் கொடுக்கின்ற அளவுக்கு நேசித்து நல்ல நண்பர்களாயிருந்து சவுலின் கைக்கு தாவீதைத் தப்புவித்தார். இயேசு தன்னுடைய 3 1/2 ஆண்டுப் பணியில் தமது சீடர்களுக்கும், தம்மை தேடி வந்த மக்களுக்கும் சுகம் கொடுத்து, பாவத்தை மன்னித்து, மன அமைதி வழங்கி, நல்ல நண்பனாயிருந்தார். இயேசு சீடர்களை நோக்கி நான் இனி உங்களை வேலைக்காரன் எனச் சொல்லமாட்டேன், நண்பன் என்று அழைக்கிறேன் என்றார் ஒருமுறை. மத்தேயு 26 : 50-ல் தன்னைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாசை நோக்கி `சிநேகிதனே, முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்’ என்றார்.

நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நல்ல நண்பர்களை நண்பர்களாக்குவோம். அவர்களோடு இணைந்து கடவுளின் மகிமைக்காகப் பணியாற்றுவோம். நமது நண்பர்கள் கிறிஸ்துவின் சிந்தையாகிய ஆத்ம ஆதாயம், சேவை, தியாகம், அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். முதலில் இயேசுவை நமது நண்பராக்குவோம். இயேசுவே நமது இனிய நண்பர்.

கர்த்தாவே, நீர் கொடுத்த நல்ல நண்பர்களுக்காக நன்றி. அவர்களோடு இணைந்து கடவுளுக்குச் சான்று பகர உதவி தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.