யாத்திராகமம் 13 : 17-22                                               28 செப்டெம்பர், 2017 வியாழன்
“விடியற்காலமாகவே இயேசு கரையில் நின்றார்.” – யோவான் 21 : 4

கடவுள் கானான் நாட்டை இஸ்ரவேலருக்கு இலவசமாகக் கொடுத்தார். முற்பிதாக்களில் ஒருவராக யாக்கோபின் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பஞ்சம் பிழைக்க இவர்கள் எகிப்து நாட்டில் குடியேறினார்கள். எகிப்தில் ஆரம்ப நாட்களில் மேன்மையுடன் வாழ்ந்தார்கள். காலஞ்செல்லச் செல்ல இஸ்ரவேலர் அடிமைகளாக்கப் பட்டார்கள். நானூற்று முப்பது வருட அடிமைத்தனம் இவர்கள் வாழ்வைக் கசந்து போகச் செய்தது. கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். கடவுள் இந்த மக்களின் கூக்குரலைக் கேட்டார், வேதனைகளை அறிந்தார், மீட்கும்படி இறங்கி வந்தார்.

மோசேயை எழுப்பி, அவனை அரச அரண்மனையில் தலைமைத்துவப் பயிற்சி பெறச் செய்து, அவர் தலைமையில் விடுதலை பெறச் செய்து அழைத்து வந்தார். பத்து வாதைகள் எகிப்தில் ஏற்படச் செய்தார். பத்தாவதில் தலையீற்றுகள் அனைத்தும் மாண்டுபோயின. ஆனால் ஆண்டவரின் வார்த்தையின்படி தங்கள் வீட்டு வாசல்களில் ஆட்டுக் குட்டியின் இரத்தம் பூசப்பட்ட வீடுகளில் இத்தகைய உயிர் இழப்புகள் ஏற்படவில்லை. இஸ்ரவேலர் விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார்கள். இரவோடு இரவாக இஸ்ரவேலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதை அரசன் அறிந்தான். அதிக கோபங்கொண்டான். இஸ்ரவேலரை அழித்து ஒழிக்க படைகளோடு புறப்பட்டான். மக்கள் வனாந்தரத்தில் வெயிலின் கொடூரத்தால் பயணிக்க முடியாத நிலையை கடவுள் அறிந்தார். இரவு நேரத்திலும் தங்குவது ஆபத்தாக முடியும் என்பது கடவுளுக்குத் தெரியும் எனவே மக்கள் சூரிய ஒளியில் சோர்ந்து போகாதிருக்க மேகஸ்தம்பத்தில் அவர்களுக்கு நிழல் தந்தார். இரவுப் பயணம் தொடர அக்கினிஸ்தம்பத்தில் அவர்களுக்கு வெளிச்சம் காட்டினார்.

கடவுளின் பிரசன்னத்தை இதன் வழியாகக் காண்பித்து இஸ்ரவேலரை இந்த மேகக் குடையில் காத்து வழி நடத்தினார். இஸ்ரவேலர் மேகத்திலும் அதில் காணப்பட்ட மகிமையிலும் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தார்கள்.

நமது ஆண்டவர் சிலுவையில் மரித்து உயிர்த்தார். சீடர்களுக்கு தரிசனமானார். ஆனாலும் முழுமையான நம்பிக்கை கொள்ளாமல் பேதுரு தம் தொழிலுக்குத் திரும்பினார். மற்ற சீடர்களும் அவரோடு மீன் பிடிக்கச் சென்றார்கள். இரவெல்லாம் முயற்சித்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. அதிகாலை கரைக்குத் திரும்பினார்கள். கடற்கரையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அவர்களைப் பார்த்து வலையை படகின் வலப்பக்கம் போடுங்கள் என்றார். கீழ்ப்படிந்து போட்டார்கள். அதிக மீன்கள் கிடைத்தன. இத்தகைய நிகழ்வை முன் கண்ட அவர்கள் அதோடு இதை இணைத்துப் பார்த்தார்கள். சொன்னவரை உற்றுப் பார்த்தார்கள். அவர் இயேசு என்று கண்டார்கள். அதுமட்டுமல்ல சீடர்களுக்கு உணவாக அப்பமும் மீனும் ஆயத்தம் செய்து வைத்திருந்தார்.

கடவுள் நம்மையும்  அழைத்து தமது பிள்ளைகள் என்ற தகுதியை தந்து  வாழ்விக்கிறவர். நாம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் நம்மோடிருக்கிறார். அதனால் தான் இம்மானுவேலராக நம்முடன் வாழ வந்தார். வனாந்தரப் பயணம், ஆபத்தா, பயமா, சோர்வா? ஏமாற்றமா? கடவுள் நம்மோடிருக்கிறார். கடந்த கால அனுபவங்கள் வழியாக அவரில் நம்பிக்கை கொள்ளுவோம். துணிவோடும் தைரியத்தோடும் வாழுவோம்.

எல்லாவற்றையும் ஆளுகிற கடவுளே! எங்களை இயேசுவில் அழைத்திருக்கிறீர். அழைப்பில் நிலைத்திருந்து துணிவோடு வாழ, உம்மைப் பின்பற்ற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.