லூக்கா 5 : 1-11                                              16 ஆகஸ்ட், 2017 புதன்

“அடியேன் யாது பதிலுரைப்பேன்.” – யோபு 40 : 4

தமிழக அரசியல் கட்சிகளை நாளிதழ் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். காலில் விழுவது, போலியாகக் குனிந்து நிற்பது, வாயைப் பொத்திக் கொண்டு உட்காருவது போன்ற காட்சிகள் வழியே தங்கள் தகுதியின்மையை வெளிப்படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள்.

வாசிப்புப் பகுதியில் திரளான மீன்பிடிக்கப்பட்ட புதுமையான அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. பேதுரு என்பவர் இந்த நிகழ்வில் தொடர்பு கொண்டிருந்தார். அற்புதம் நடத்தியவர் இயேசு. இயேசுவின் பாதங்களில் பேதுரு விழுந்தார். நான் பாவி என்றார். இயேசுவே, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்றார். யோபு என்பவரின் வாழ்க்கையின் அனுபவம் இன்றைய வாசிப்புப் பகுதி. நான் செத்தால் நலம் என்ற நிலைக்கு யோபு தள்ளப்பட்டார். இவர் பெருந்தனக்காரர். சொத்து, சுகம், மனைவி, பிள்ளைகள் அத்தனையும் அவரைவிட்டுப் போனது. வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இறையவரோடு, சர்வ வல்லவரோடு யோபு வழக்காடியதாக எழுதப்பட்டிருக்கிறது. இறையவர் தன்னைச் சந்தித்த உடனே யோபு ‘நான் நீசன்… ஐயோ அடியேன் யாது பதிலுரைப்பேன்’ என்றார் என்கிறது திருவசனம்.

உலகத் தேவைகளுக்காக நாம் ஏராளமாகப் படித்திருக்கலாம். பெரிய பதவிகளில் இருக்கலாம். நிறைய செல்வங்கள் சேர்த்திருக்கலாம். ஆனால் இவையேதும் இறைவனின் முன்னே மதிப்புள்ளவையல்ல. நீங்கள் பெரும் பணக்காரர் என்பதற்காக ஆண்டவர் அழைக்கும்போது உங்கள் வேலைக்காரரை அனுப்ப முடியாது. இறையவரின் ஆற்றலுக்கு முன்னே நானும் நீங்களும் ஒன்றுமில்லை. இறையவரின் அன்புக்கும் கருணைக்கும் நிகர் வேறு யாரும் இல்லை. நான் என்னைத் தாழ்த்துகிறேன். சிரம் தாழ்த்துவேன், கரம் கட்டுவேன், பணிவுடன் அவர் சொல்வதைக் கேட்பேன். நீங்களும் உங்களைத் தாழ்த்துங்கள். தலை குனிந்து கர்த்தரின் குரல் கேளுங்கள். நமக்காக, நமது பாவங்களுக்காகத் தன்னையே பலியாகத் தந்தவரின் குரல் அது. அதற்குரிய மரியாதையோடு பணிந்துகொள்ளுங்கள்.

வனாந்திரத்தின் குரலே, நாங்கள் உம்மைத் தொழவும், தாழ்மையுடன் வாழ்ந்திருக்கவும் தேவையான ஞானத்தைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.