மத்தேயு 7 : 24-27 17 ஜூலை, 2017 திங்கள்
“கேட்டு, இவைகளின்படி செய்கிறவன்…” – மத்தேயு 7 : 24
உறுதியான கட்டுமானத்திற்கு … சிமென்ட் என்ற விளம்பரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆடம்பர விளம்பரங்களைப் பார்த்து பயனற்ற பொருளை வாங்கி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். பார்த்தல், கேட்டல், படித்தல் ஒருவகை மயக்கம். ஒருவரின் மனைவி எப்பொழுதும் வேதாகமம் படித்துக்கொண்டே இருப்பார். வீடு பெருக்குவது, துணி துவைப்பது, சமைப்பது, கடைக்குச் செல்வது, சம்பாதிப்பது அத்தனையும் கணவன் தான் செய்வார். இந்தப் பெண்மணி வேதம் படித்து என்ன பயன்?
என் வார்த்தைகளைக் கேளுங்கள், அதற்கேற்ப வாழுங்கள், அறிவாளிகள் ஆவீர்கள். உங்கள் வாழ்வு அசையாத அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு ஒப்பாகும். இப்படி ஒரு சிறிய உவமையைச் சொன்னவர் இயேசு. கேட்டதற்கு, படித்ததற்கு ஏற்ற வாழ்வில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ்ந்திருந்தால் நமது சபைகள் எப்படி இருந்திருக்கும்? எப்படி இருக்க வேண்டிய சபைகள் இப்படி இருக்கின்றன. எப்படி வாழவேண்டிய கிறிஸ்தவர் பிறர் நகைக்க வாழுகின்றனரே. கிறிஸ்தவப் பள்ளிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் பணத்தைச் சார்ந்து செயல்பட்டு இறைச் சேவையை மறந்து சிறுமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே. குற்றம் பெருத்தவையாகியிருக்கின்றன நமது ஊர்கள். இங்கே பல குற்றவாளிகள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். பலநேரங்களில் காலையில் படிக்கிற வேதாகமம் பகல் நேரத்து நமது செயல்பாடுகளில் பிரதிபலிப்பதேயில்லையே. நாம் செய்கிற தவறுகளை நாம் நமது சாமர்த்தியமாக, அறிவின் விளைவாக, புத்திக்கூர்மையின் பலனாக புளகாங்கிதப் பட்டுப்போகிறோம். மகனே, மகளே நீ தவறு செய்கிறாய் என்ற இறையவரின் குரல் இந்த ஆரவாரத்தில் நமக்குக் கேட்பதேயில்லை. பெருமழை பெய்தால்! பெருவெள்ளம் வந்தால்! பெருங்காற்று வீசினால் நமது நிறுவனங்கள் பேரழிவிற்கு உட்படுமே.
வேதத்தை வாசியுங்கள். இயேசுவின் செய்தி நமது மனங்களில் எப்போதும் தங்கியிருக்கட்டும். திருவசனங்கள் நமது தின வாழ்வை செம்மைப்படுத்தட்டும். நாம் அவருக்குள் வாழ்ந்திருப்போம். அவரே நமது வாழ்வின் அடித்தளமாகட்டும். புயல் வரும், மழை வரும். ஆனால் நாம் இயேசுவுக்குள் அசையாதிருப்போம்.
பூரணரே, எங்கள் அசையாத அடித்தளம் இயேசுவாகட்டும்! உறுதியான வாழ்க்கையை வேதவசன நடைமுறைதரட்டும். இயேசுவின் வழியே ஆமேன்.
