தரிசனம் 1 : 5-6                                                             10 ஜூலை, 2017 திங்கள்

“பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது.” – 1 யோவான் 1 : 7

பாவம் என்ற சொல் முதல் யோவான் நிருபத்தில் சுமார் இருபத்து ஐந்து தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவத்திலிருந்து விலகி வாழ்ந்திட பல ஆலோசனை இக்கடிதத்தில் பதிவாகியிருக்கிறது. பாவத்திலிருந்து விலகி வாழ்ந்திட வேண்டும் என்ற எச்சரிப்புகளும் இருக்கின்றன. குமாரனாகிய இயேசுவின் இரத்தம் எவ்வித பாவத்தையும் நீக்கி, நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. இயேசுவின் இரத்தம் குற்றமில்லாதது. பாவப் பரிகாரமாக சிலுவையில் சிந்தப்பட்டது இயேசுவின் இரத்தம். உலகத்தவரின் பாவத்தைக் கழுவிச் சுத்திகரிப்பதற்காகவே பாவ நிவாரண பலி இரத்தமாகச் சிந்தப்பட்டது. `இயேசுவின் இரத்தம்’ என்பது மந்திரச் சொல் அல்ல. நம்மை செத்த கிரியைகளற்ற பாவத்தின் செயல்களிலிருந்து தூய்மைப்படுத்துகிறது இயேசுவின் இரத்தம். ஒளியில் நடக்க, புதிய ஆற்றல் கொடுத்திட; நல்ல செயல்களைச் செய்திட உணர்வும், உந்துதலும், ஆவலும், ஆற்றலும் தருவதே இயேசு நமக்காக சிலுவையில் சிந்திய இரத்தம். இதைத்தான் தரிசன ஆகமத்தில், தங்கள் மேலாடைகளை ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்தவர்கள் என்று உவமித்து எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் இரத்தம் நமது இதய சுத்தியின் காரணமாகின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பலியிடப்பட்ட மிருகத்தின் இரத்தம் தெளிக்கப்பட்டது, வாசல் நிலைக்கால்களில் பூசப்பட்டது. இப்படி இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டவை, அழிவினின்று தண்டனையினின்று தப்பித்துக் கொண்டன. இதே பார்வையில் இயேசுவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்கிறது.

திருப்பந்தி என்ற திருவிருந்தில் `பாவ மன்னிப்பிற்காக சிந்தப்பட்ட’ இயேசுவின் இரத்தம் வழங்கப்படுகிறது. பாவம் மன்னிக்கப்பட்ட உறுதியான அனுபவ உணர்வுடன் இயேசுவின் இரத்தமாம் திராட்சைச் சாறு பெற்று பருகப்படுகின்றது. இறை அருள் இயேசுவின் இரத்தத்தில் விசுவாசிகளின் உடலில் சங்கமம் ஆகின்றது. விசுவாசிகளின் இரத்தம் தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்து புரிந்து கொள்ளக் கடினமானது தான். இயேசுவின் இரத்தம் பெற்றுப் பருகப்படுவது ஓர் இறைமயமான மறைபொருள் செயல்பாடு எனலாம்.

சுத்திகரிக்கிற இயேசுவின் இரத்தத்திற்காக தோத்திரம் செய்வோம். இதே அனுபவத்தில் ஓர் எச்சரிப்பையும் மனதில் ஏற்போம். எவராவது அபாத்திரமாய், தகுதியற்ற நிலையில், மனந்திருந்திட உறுதியற்ற நிலையில் ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவரின் இரத்தத்திற்கு எதிராகக் குற்றமிழைத்து தண்டனைத் தீர்ப்பை வரவழைத்துக் கொள்கிறார். இயேசுவின் இரத்தம் விலைமதிக்க முடியாதது. அலட்சியப்படுத்தாதீர்! ஆசிகளை இழக்காதீர்! ஆக்கினையை ஏற்காதீர்.

இறையவரே,ஏனோதானோ என உமது அருள்  பயன்படுத்தப்பட்டால், பயன்படுத்துவோரை அழித்து விடும் என்ற உணர்வுடன் எச்சரிப்புடன் அருளை அணுகுகின்ற உணர்வினைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.