2 இராஜாக்கள் 18 : 14-15                                         7 ஜூலை, 2017 வெள்ளி

“ஆலயத்தி(லும்)… எடுத்து வெகுமானமாக…” – 2 இராஜாக்கள் 16 : 8

சீரியா நாட்டின் அரசரும் இஸ்ரவேல் அரசரும் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் சேர்ந்து யூதேயா நாட்டின் மேல் படையெடுத்தனர். யூதேயா நாட்டின் அரசர் பெயர் ஆகாஸ். தனது நாட்டைக் காப்பாற்றிட, எருசலேம் பேராலயத்தில் இருந்த வெள்ளியையும், பொன்னையும் வெகுமானமாக்கினார் ஆகாஸ்.

வாசிப்புப் பகுதியிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு. யூதாவில் அரசராயிருந்தவர் பெயர் எசேக்கியா. அப்பொழுது அசீரியா நாடு யூதாவின் மேல் படை எடுத்தது.  பல நகரங்களை அசீரியர் வென்றெடுத்தனர். எசேக்கியா அரசர் அசீரியாவுக்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார். ஆலய சம்பத்து அசீரியாவுக்குக் கப்பம் ஆயிற்று.  `சிவன் சொத்து குல நாசம்’ என்பது நட்பு மதத்தினரின் பொதுவான நம்பிக்கை. `கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தல்போல…’ என்று ஒரு சொல்லாடல் இருக்கிறது. இவையிரண்டிலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்து நமக்கும் பொருந்தும். தனக்குச் சொந்தமில்லாத பொருளை தெய்வத்திற்கு அர்ப்பணிப்பது தவறு. இது போன்றே தெய்வ சொத்தை தனியார் பயன்படுத்துவது தேவத் துரோகம்.

தேவத் துரோகங்கள் ஆகாஸ் காலத்தில், எசேக்கியா காலத்தில் மட்டும் நடக்கவில்லை! இன்றைக்கும் தொடருகின்றது! ஆலய காணிக்கை, பொறுப்பாளர்களால் கையூட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆலய நிலம், சபை நிறுவனச் சொத்துக்கள் பரிபாலனப் பொறுப்பில் இருப்பவர்களால், சுயலாபத்திற்காக விற்கப்படுகின்றன. இறையவர் செல்வத்தால், தங்கள் செல்வாக்கை சிலர் உயர்த்திக் கொள்கின்றனர். இதைப் பற்றி ஊழியர்கள் கவலைப்படுவதில்லை, கண்டிப்பதில்லை, வெட்கப்படுவதில்லை.

இறையவர் வீடு கள்ளர்குகை ஆக்கப்பட்டபோது இயேசு சினம் கொண்டார். கொள்ளையரை விரட்டியடித்தார். சாட்டையால் பேசினார் இயேசு. இறையவர் கருணையுள்ளவர், மன்னிக்கிறவர் இது உண்மை தான். இறையருளின் விளக்கமாக மன்னிப்பு மனிதரைச் சந்திக்கிறது. அருளப்படுகிற மன்னிப்பு அவமானப்படுத்தப்பட்டால் இறையவரின் சீற்றம் உன்னைத் தொடும். இது உறுதி. கடவுளின் செல்வத்தைச் சுரண்டியவர்கள் செல்லாக்காசு ஆனதை விசுவாசிகள் அறிவர். நானும் அறிவேன். பல வருடம் படுக்கையில் கிடந்தார் அந்த முன்னாள் பொருளாளர். காரணம் இருந்தது. கடவுளின் பணத்தைக் கையாடல் செய்தார். இரவும் பகலும் வேதனையில் கூச்சலிட்டே இறந்தார் இன்னொருவர். சபையின் சொத்தை விற்றுப் பயன்படுத்தியவர் இவர். இன்னொருவருக்கு, கட்டிய மனைவிகூட கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றவில்லை! கதைகள் தொடருகிறது.

கம்பி வழியே செல்கிற மின் ஆற்றல் கண்ணுக்குத் தெரியாது! ஆனால், தொட்டால் ஆபத்து. தொடாதீர் என்றுகூட சில இடங்களில் எழுதப்பட்டிருக்கும். ஆபத்தோடு விளையாடாதீர்! ஆபத்துக்கு விலகுவீர்! தொடக்கூடாததைத் தவிர்ப்பீர்! ஜீவனைக் காத்துக் கொள்வீர். வம்பை விலைகொடுத்து வாங்காதீர்.

எச்சரிப்பை முன் வைக்கிற இறையவரே, தீமைக்கு விலகி வாழுகின்ற மனத்திண்மை தாரும். இயேசு வழியே ஆமேன்.