எபேசியர் 2 : 1-10 23 ஜுன், 2017 வெள்ளி
“…அவர் எல்லாருக்காகவும் மரித்தார் என்று நிதானிக்கிறோம்.” – 2 கொரிந்தியர் 5 : 15
கடவுளின் அன்பும், அருளுமே மீட்பின் அடித்தளம். ஆறுதலின் கடவுளின் விருப்பத்திற்கு விரோதமாய் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் கடவுளின் அன்பினாலும் அருளுளினாலும் புதிய வாழ்க்கை பெற்று செயல்படும் முறையை இங்கே ஆசிரியர் விவரிக்கிறார். கிருபையினால் விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டவர்கள். இது கடவுளின் ஈவு. இதுவே நாம் வாசித்த பகுதியின் மையச் செய்தி. திருமறையில் பாவமும் மரணமும் தொடர்புள்ளவைகளாகக் கூறப்பட்டுள்ளது. பாவத்தின் சம்பளம் மரணம். உயிர்த்தெழுதல் படைப்பைப் போன்று எப்படி கடவுளின் அருளோ அப்படியே பாவத்திலிருந்து புதிய வாழ்க்கைக்குரிய மீட்பும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. தீய சக்தி அதிகாரத்தோடு கிரியை செய்வதற்கு இடம் கொடுப்பது இவ்வுலகத்தின் வழக்கம். பாவ வாழ்வு என்பது கடவுளின் விருப்பப்படி வாழ்க்கையை அமைக்காமல் நமது மனம் விரும்பிய முறையில் வாழுவதாகும்.
கடவுளின் இரு பண்புகளான அன்பும், கிருபையும் கிறிஸ்துவின் வழியாய் மனிதனின் மீட்புப் பணியில் வெளிப்பட்டது. கிறிஸ்துவுக்குள் நாம் முந்திய வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்கு நேராய் உயிர்ப்பிக்கப் படுகிறோம். இதனால் நமது வாழ்க்கையில் உயிர்த்தெழுதல் மைய இடத்தைப் பெறுகிறது. இந்த வாழ்வு நமக்கு இயல்பாகவே கிடைப்பதில்லை. கடவுளின் கிருபையாலே கிடைக்கிறது. கிறிஸ்துவோடு ஐக்கியம் எனும் உயரிய நிலையில் வாழும் வாழ்க்கை நமக்கு அருளப்படுகின்றது. கிறிஸ்துவின் அருளினால் கிடைத்த இந்த வாழ்க்கை நித்தியமானது. நிகழ் காலத்திற்கு உரியவையாயிராமல் எதிர்காலத்திற்கும் உரியது. ஆதாமுக்குள் எல்லா மனிதரும் பாவம் செய்தது போல எல்லாரும் கிறிஸ்துவுடன் மரித்திருக்கிறார்கள். அவர் மரணத்தை ஜெயித்து உயிர்த்தது போல விசுவாசிகள் நித்திய மரணத்தை வெற்றி கொண்டிருக்கிறார்கள். இதை விசுவாசத்தால் சொந்தமாக்கிக் கொள்வது ஒவ்வொருவரையும் சார்ந்தது.
கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிற நாம் இனி நமக்காகப் பிழைத்திராமல் நம்மை உயிர்ப்பித்திருக்கிற கிறிஸ்துவுக்காகப் பிழைத்திருக்க வேண்டும். நாம் பிழைக்கும்படி இயேசுகிறிஸ்து மரித்தார். நம்மைச் சுற்றியிருக்கிற மக்கள் இந்த இயேசுவில் விசுவாசம் வைத்துப் பிழைக்கும்படி அவர்களுக்கு இச்செய்தியைச் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போம்.
நம்மை மீட்க தன்னுயிரையே ஈந்த இயேசுவுக்காய் பிழைத்திருப்போம். இயேசுவின் பணியைத் தொடருவோம்.
நாங்கள் வாழ்வடைய உமது நேசக்குமாரனைத் தந்த கடவுளே, அவரில் நித்திய வாழ்வுக்குப் பிழைத்திருக்கிற நாங்கள் அவருக்காக வாழ அருள் செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
