சங்கீதம் 141 : 1-3 9 ஜுன், 2017 வெள்ளி
“வேலையெல்லாம் நீ முடித்துத் தீருமட்டும் அவர் … உன்னைக் கைவிடுவதுமில்லை.” – 1 தினவர்த்தமானம் 28 : 20
இஸ்ரவேலர் விடுதலைப் பயணத்தில் சீனாய் மலை அடிவாரம் வந்தார்கள். கடவுள் சீனாய் மலையில் இறங்கினார். பயங்கரமான இக்காட்சியை இஸ்ரவேலர் கண்டார்கள். கடவுள் மோசேயை மலைமீது ஏறிவரச் சொன்னார். மோசே ஏறிப்போனார். கடவுள் சீனாய் மலையில் மோசேயை மத்தியஸ்தராகக் கொண்டு இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்தார். இந்த உடன்படிக்கையின் உறவில் வாழ பத்து கற்பனைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். இந்தக் கற்பலகைகளை ஒரு பெட்டியில் வைத்தார்கள். அதை வைத்துக் கூடாரம் போட்டார்கள். இதுவே கடவுள் வாசம் பண்ணும் தரிசனக் கூடாரம் அல்லது ஆசரிப்புக் கூடாரம். இது கடவுள் வாசம் பண்ணும் இடம். தரிசனக் கூடாரம் கடவுள் தங்கள் மத்தியில் வாழ்கிறார் என்பதை உறுதி செய்தது. மோசே அழகிய தரிசனக் கூடாரத்தை அமைத்து அதை திருநிலைப்படுத்தினார். கடவுளின் பிரசன்னம் தரிசனக் கூடாரத்தை நிரப்பியதை இஸ்ரவேலர் கண்டார்கள். இஸ்ரவேலர் கானான் நாட்டிற்குச் சென்றார்கள். காலப்போக்கில் அரசமைந்தது. இரண்டாவது அரசனாக தாவீது அரியணை ஏறினார். சுற்றியுள்ள நாடுகள் மீது படையெடுத்து நாட்டின் எல்லைகளை விரிவு படுத்தினார். மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்.
தாவீதுக்குக் கடவுள் தங்கள் மத்தியில் வாழ அழகிய ஆலயம் கட்டவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் தாவீது அல்ல, அவர் மகன் சாலொமோன் தான் ஆலயம் கட்டுவான் என்பதை நாத்தான் தீர்க்கர் வழியாக தெரிவித்தார். நாத்தானின் அறிவுரையை ஏற்ற தாவீது ஆலயத்திற்காக பொருட்களைச் சேகரித்தார். ஆலயத்தின் வரைபடத்தைக் கடவுள் தாவீதுக்கு வரைந்து காண்பித்திருந்தார். அதை தன் மகன் சாலமோனுக்கு தாவீது வரைந்து காண்பித்தார். மிகப்பெரிய ஆலயப் பணியைச் செய்ய வேண்டும். பொருளாதார வசதிகள், பணியாட்கள் போன்றவற்றை நினைத்து மலைப்பும் திகைப்பும் ஏற்பட்டது. தாவீது சாலொமோனிடம் கடவுள் வாழும் இருப்பிடத்தை அமைக்கப் போகிறாய். ஆலயப் பணியை செய்துதிடுமட்டும் கடவுள் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று தைரியம் சொல்லுகிறார்.
சாலொமோன் தாவீது வரைந்து காட்டியபடி ஆலயத்தை அழகாக கட்டி முடித்தார். கட்டிடம் கலைநயம் மிக்கதாக அமைந்தது. சாலொமோன் ஆலயம் கட்டின இடம், கடவுள் தாவீதுக்குத் தரிசனமானதும், தாவீது ஆயத்தம் செய்திருந்ததுமான மோரியா மலையிலுள்ள எபூசியனான ஒர்னாவின் களமாகும். கடவுள் எங்கோ வாழ்கிறவரல்ல. மக்களோடு வாழுகிறவர். அதனால் தான் `இதோ, கடவுளின் கூடாரம் மனுஷரிடத்திலிருக்கிறது; அவர்களிடத்தில் அவர் தங்குவார் என்று வாசிக்கிறோம். நமது ஆலயங்களில் கடவுளின் நிறைவான பிரசன்னம் இருக்கிறது. அவரையே ஆராதித்து மகிழுவோம்.
எங்கள் மத்தியில் வாழுகின்ற கடவுளே! இயேசுவில் அழைக்கப்பட்டிருக்கிற நாங்கள் வசனத்தையும் சாக்கிரமெந்துகளையும் பெற்றுக் கொள்ள உம் வாசஸ்தலத்தில் நாடிவர உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
