எரேமியா 21 : 13-14                                           10 செப்டெம்பர், 2021 வெள்ளி

“ஒவ்வொருவனுக்கும் அவனவன் வழிகளுக்கும் அவன் செயல்களால் விளைந்ததற்கும் தக்கபடியே கொடுப்பேன்.” – எரேமியா 17 : 10

சாது சுந்தர் சிங் ஆண்டவரால் அழைக்கப்பட்ட ஒரு ஊழியர். இந்தியாவில் பல இடங்களில் அற்புதமாக ஊழியம் செய்து வந்தார். ஒரு நாள், இரண்டு பேர் அவரிடம் வந்து பணம் பறிப்பதற்கு திட்டமிட்டனர். ‘ஐயா, எனது நண்பன் இறந்து போனான். ஒரு துணியை கொண்டு அவனை மூடி வைத்து இருக்கிறேன். அவனை அடக்கம் பண்ணவேண்டும். எனது கையில் ரூபாய் இல்லை’ என்று பொய் சொல்லி பணம் வாங்கிச் சென்றான். தனது நண்பனிடம் சென்றான். மூடிய துணியை விலக்கினான். அந்த வாலிபன் உண்மையிலே இறந்திருந்தான். மீண்டும் சாதுவிடம் ஓடினான். ஐயா, உங்களை நான் ஏமாற்றினேன். என் நண்பன் உயிரோடு தான் இருந்தான். இப்பொழுது உண்மையிலே செத்துப் போனான் என்று புலம்பினான். முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்!

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களால் கடவுளின் அன்பை இழந்தனர். சிதறடிக்கப்பட்ட மக்களாயினர். பாவம் மிகவும் கொடூரமானது. செயல் மட்டும் பாவமன்று, அச்செயலைத் தூண்டும் சிந்தனையும் வழியும், திட்டமிடுதலும் பாவமே. பாவ வழிகளையும், வரவிருக்கும் தண்டனைகளையும் தியான வசனம் வெளிப்படுத்துகிறது. நம்முடைய செயல்களுக்குத் தக்க பலனை இறைவன் தந்தால் இவ்வுலகத்தில் ஒருவரும் உயிரோடிருக்க முடியாது. இறைவனின் நியாயத் தீர்ப்பு பட்சபாதம் இல்லாதது. முக தாட்சணியம் இல்லாதது. உலகப் பிரகாரமான நியாயத் தீர்ப்பில் செல்வாக்கு, பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதி தோற்கடிக்கப்பட்டு அநீதி வெல்லலாம். இறைவனது தீர்ப்பில் அநீதி ஜெயிக்க முடியாது. ஆகவே செயல்களிலும் சிந்தனையிலும் எச்சரிப்புடன் வாழ கடவுள் அருள் நாடுவோம். அறியாமற் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, மன்னிப்பு பெற்று, திருந்தி வாழுவோம். இறைவழி விரும்பப் பழகுவோம்.

அளவில்லாமல் எங்களை நேசிக்கிற இறைவா, பாவம் நிறைந்த உலகில் பாவத்திற்கு விலகி, பரிசுத்த வாழ்வு வாழ உதவி செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.