1 கொரிந்தியர் 15 : 9-10                                 07 செப்டெம்பர், 2021 செவ்வாய்

“நான் கடவுளின் சபையைத் துன்பப்படுத்தினபடியால் அப்போஸ்தலனென் று பேர் பெறுவதற்கும் நான் தகுந்தவனல்ல.” – 1 கொரிந்தியர் 15 : 9

ஆதிச்சபையின் காலத்தில் அப்போஸ்தலராக வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தகுதி இருந்தது. ‘இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு’ சாட்சியாக இருந்தவர் அப்போஸ்தலர் ஆகலாம். இது கண்டிப்பான நிபந்தனை. ஆதித் திருச்சபையில், அப்போஸ்தலர்களுடைய போதனையின் மையப் பொருள் இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலுமே. தாங்கள் ஏற்படுத்திய சபைகளுக்கெல்லாம் இப் பேருண்மையை நற்செய்தியாக அறிவித்தார்கள். பிற்காலத்திய போதனைகள், இப்பேருண்மையை மையமாகக் கொள்ளவில்லை.

பவுலடிகளின் முதன்மைச் செய்தி ‘இயேசு உயிர்த்தெழுந்தார்’! உயிர்ப்பின் உண்மையை வலியுறுத்த, கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கண்டவர்களின் பட்டியலைத் தருகிறார் என 1கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் குறிப்பிட்டார். ‘பொறுப்புள்ள சாட்சிகள்’ என்று ஏற்றுக் கொண்டோரை மட்டுமே பவுலடிகளார் கொரிந்து சபைக்குக் குறிப்பிட்டு எழுதினார்.

கேபா, பன்னிருவர், ஐநூறு பேருக்கு அதிகமானோர் என்று எழுதிக் கொண்டே போகிற பவுலடிகளார் எனக்கும் தரிசனமானார் என்று தனது அனுபவங்களைச் சுட்டிக் காட்டினார். தாம் கிறிஸ்தவர்களுக்கு இழைத்த தீங்கை மறந்து விடவில்லை. அவர் தனது நிலையை உணர்ந்து எழுதியதுதான் இத்தியான வசனம். ‘துன்பப்படுத்தினேன், தகுதியற்றவன்’ என்று தாழ்மையுடன் ஒப்புக் கொண்டார். ‘பாவிகளில் பிரதான பாவி’ என்றெல்லாம் தம்மைத் தாழ்த்துகின்றார். பழிச் சொல்லுக்கு தாம் முற்றிலும் தகுதியுள்ளவர் என்பதை மனப்பூர்வமாய் பவுலடிகளார் ஏற்றுக் கொண்டார். இத்தனை தகுதியின்மை இருந்தும் அப்போஸ்தலனாக தமக்குத் தகுதியளித்த இறைவனின் கிருபையை நன்றியோடே நினைவுகூர்ந்தார். தமது தகுதியின்மையின் முன் இயேசுவின் கருணை, மன்னிப்பு, அன்பு, கிருபை நிழலிடுவதை நினைவிற்கொண்டார். திருச்சபை ஊழியங்களை நான் குறை கூறுகிறேனா? திருச்சபைப் பணிகளைப் பரிகாசம் பண்ணுகிறேனா? அல்லது பிறரைத் தூண்டி விடுகிறேனா? எனது நிலை என்ன? நான் என்ன சாதித்திருக்கிறேன்? இவற்றை நாம் ஒவ்வொருவரும் யோசிக்க இந்தத் தியான உரை துணைசெய்யட்டும்.

தகுதியில்லாத எங்களைத் தகுதிப்படுத்திய இறைவா! நாங்கள் உயிரோடிருக்கும் நாள் எல்லாம் உமது பணி செய்ய அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.