அப்போஸ்தலர் 27 : 30-32 06 செப்டெம்பர், 2021 திங்கள்
“இவன் குற்றஞ்சாட்டப்பட்டவன்…. மரணத்துக்காவது விலங்குக்காவது ஏதுவானவனாக நான் காணவில்லை.” – அப்போஸ்தலர் 23 : 29
பவுல் ஒரு யூதர்… சிசிலியா நாட்டு தர்சு நகரில் பிறந்தவர். எருசலேமில் வளர்ந்தவர். இறையியல் அறிஞர். கமாலியேல் என்ற அறிஞரின் மாணவர். நியாயப் பிரமாணத்தில் வைராக்கியமானவர். கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தினவர். முதல் இரத்த சாட்சி ஸ்தேவானுடைய மரணத்துக்குக் காரணமாக இருந்தவர். இறைவன் இயேசு நேரடியாக பவுலுக்கு தன்னை வெளிப்படுத்தினார். இறைப்பணிக்குத் தெரிந்து கொள்ளப்பட்டார். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பல பட்டணங்களிலும், பல கிராமங்களிலும் இயேசுவே ஆண்டவர் என்று முழங்கினார். சபைகளை உருவாக்கினார். ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றார். யூதர்கள் நடுவிலும், யூதரல்லாத புற ஜாதியர் நடுவிலும் இறைப்பணி செய்தார்.
பவுலுக்கு விரோதமாக யூதர்கள் சதி யோசனை செய்து அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். யூத ஆளுகை மன்றத்திற்கு முன் பவுல் நிறுத்தப்பட்டார். பின்னர் செசரியாவுக்கு அனுப்பப்பட்டார். கிலவுதிய லீசியா என்ற பேரரசன், செசரியாவின் ஆளுநரான பேலீக்ஸுக்கு பவுலடிகளாரைப் பற்றி எழுதிய வரிகள் தான் இன்றைய தியான வரிகள். மிகவும் சுருக்கமாக, தனக்கு ஒன்றும் தெரியாதது போலக் கடிதம் எழுதி பொறுப்பை பேலீக்ஸிடம் தள்ளிவிட்டார் அரசர். இயேசுவையும் அவரது பாடு மரணத்தையும் அறிந்திருந்த பவுல் எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்தார். இயேசுவின் மீது பொறாமை கொண்ட யூதர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். பல பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தினர். அன்னா, காய்பா, சனகெரீம் சங்கம், பிலாத்து, ஏரோது போன்றோர் இயேசுவை விசாரனை செய்தனர். இயேசுவின் மீது ஒரு குற்றமும் காணவில்லை என்று பிலாத்து அறிக்கையிட்டார். ஆனாலும் ஜனங்களைப் பிரியப்படுத்த இயேசுவை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தார். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவருக்கு விரோதமான குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை வெளிப்படுத்தினார். இப்படி தனக்குப்பின்னே வரப்போகிற ஊழியக்காரர்களுக்குத் தன்னை முன்மாதிரியாக வைத்துப்போனார். பவுல் எல்லாவற்றிலும் இறைவன் இயேசுவை முன் மாதிரியாகக் கொண்டார். பவுலைப்போல அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரா நான், நாம், நீங்கள்? யோசிப்போம். நாம் யாருடைய மாதிரியை பின்பற்றுகிறோம். இயேசுவைப் பின்பற்றுவோம்.
மனுக்குல மீட்புக்காகப் பாவமறியாத இயேசுவைப் பலியாக்கினவரே, இயேசுவுக்காகப் பாடுகளை அனுபவிக்க வேண்டியதிருந்தால் பொறுமையோடு சகிக்க பலம் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.