மத்தேயு 28 : 5-7                05 ஏப்ரல் 2021, திங்கள்

“கலிலேயாவுக்குப் போகும்படி …சொல்லுங்கள்;  அங்கே என்னைக் காண்பார்கள் என்றார்.” – மத்தேயு 28 : 10

இயேசு தமது சீடரை, ‘சகோதரர்’ என்று உரிமையுடன் அழைத்தார். நட்பின் – உறவின் நெருக்கத்தை, சகோதரர் என்ற சொல் வெளிப்படுத்துகிறது. துவக்க காலத்தில் கிறிஸ்தவர்களுக்குக் கூட ‘சகோதரர்கள்’ என்ற பெயர்தான் வழங்கப்பட்டது. பெரிய கூட்டத்தில் மக்களிடையே பேசும்போது ‘சீமான்களே, சீமாட்டியரே’ என்று துவங்குவது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வழக்கமாகி இருந்ததாம், மேற்கு நாடுகளில். இந்தியாவிலிருந்து மேற்கு நாடு சென்றிருந்தார் விவேகானந்தார். இவர்தான் முதன்முதல் பெரியதொரு கூட்டத்தினரை ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்துத் தனது பேச்சைத் துவக்கினாராம்.

உயிர்த்தெழுந்த இயேசு ‘என் சகோதரரை கலிலேயாவுக்குப் போகும்படிச் சொல்லுங்கள்’ என்று சில பெண்களிடம் தூது சொல்லியிருந்தார். பெண்கள் இச்செய்தியை சீடருக்குக் கூறியதுடன் ‘அங்கே என்னைக் காண்பார்கள்’ என்று இயேசு சொன்ன செய்தியையும் சேர்த்துக் கூறினர். இயேசு எருசலேமில் மட்டும் தம்மை வெளிப்படுத்தவில்லை. கல்லறைக்கு அருகில் மட்டும் சிலர் பார்வைக்குப் பட்டு மறைந்துவிடவில்லை. வேறு சிலரையும் குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னார். இவர்கள் வருகைக்காக இயேசு கலிலேயாவில் காத்திருந்தார்.

இயேசுவின் பிறப்புச் செய்தியை ஏழை மேய்ப்பர்கள் முதலில் அறிந்தனர். இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை, அந்தக் காலத்தில் ‘இரண்டாந்தரக் குடிமக்களாக’ இருந்த பெண்கள் அறிந்தனர், தரிசித்தனர். இது ஆண்டவர் பெண்களுக்குக் கொடுத்த கௌரவம். பெண்கள் சீடருக்குச் சொன்னார்கள். இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை எல்லாரும் அறிந்திருத்தல் தேவைதானே! போய்ச் சொல்லுங்கள். உரக்கச் சொல்லுங்கள். உற்சாகத்தோடு சொல்லுங்கள். உலகம் முழுவதும் சொல்லுங்கள். உலகுக்குக் காண்பியுங்கள்.

உலகில் அன்பு கொண்டுள்ள கடவுளே! எங்கள் பாவங்கள் உமது திருமகனை சிலுவையில் அறைந்திடக் காரணமாயின. நீர் உமது குமாரனை உயிர்ப்பித்தீர். தோத்திரம்.