லூக்கா 24 : 1-5               04 ஏப்ரல் 2021, ஞாயிறு

“அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார்.” – லூக்கா 24 : 6

உலகில் நாம் பிறக்கும் போது மரணத்தோடு பிறக்கிறோம். வாழும்போது மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறோம். மரணம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. மரணத்திற்கு சாதியோ, நிறமோ, குலமோ எதுவும் கிடையாது.

இயேசு மரித்தார். அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். மரித்த இயேசுவை கடவுள் எழுப்பினார், கிறிஸ்தவத்தின் மையமும், மூலமும் ஆணிவேரும் இந்த உயிர்ப்புதான். கிறிஸ்தவ வழிபாடு என்பது உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துகின்ற செயலாகும். இயேசுவை கிறிஸ்து, வாக்களிக்கப்பட்ட மேசியா என்று அறிக்கையிட்டால் உயிர்ப்பை நம்பவேண்டும். உயிர்ப்பை நம்பினால் சாவைக்கண்டு பயப்படக்கூடாது.

ஒவ்வொரு ஞாயிறு தொழுகையும் உயிர்ப்பின் தொடர்ச்சியாகவே அமைகிறது. ஆலயத்தில் அடிக்கிற மணி இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்கிறது. மரணத்தால் இயேசுவை தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. ஆதாம் செய்த பாவத்தின் வழியாக நம்மிடம் வந்தடைந்த மரணத்தை இயேசு கிறிஸ்து தம் மரணத்தில் வென்றெடுத்தார். துன்பம் நிரந்தரமானதல்ல. அது கடந்து போகும். மரணமும் நிரந்தரமானதல்ல. கல்லறையும் முடிவல்ல. இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வாழ்வில்லை. கிறிஸ்தவத்திற்கு வேலை இல்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலில் தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. திருச்சபை பிறந்திருக்கிறது. கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்து ஊர் இயேசுவாக அறியப்பட்டவர் உயிர்த்தெழுதலுக்குப் பின் கிறிஸ்துவாக நிலைநிறுத்தப்பட்டார்.

இயேசுவின் கல்லறை கருவறையாகிறது. இயேசுவின் மரணம் நம் மறுவாழ்வின் தொடக்கமாகிறது. அவரது மீட்பு நம்மை கடவுளோடு நெருங்கி வரச் செய்கின்றது. உயிர்த்தெழுதலில் உயிர் பெற்ற புது சமூகம் மலருகின்றது.
இயேசு எப்படி தம் மரணத்தை முன் அறிவித்தாரோ அதுபோலவே தம் உயிர்த்தெழுதலையும் பலமுறை முன்னறிவித்தார்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வெறுமையான கல்லறை சாட்சியாயிற்று. உயிர்த்தெழுந்த இயேசுவை கண்ட பெண்கள் சாட்சிகள். இயேசு மரித்தபோது தங்களுக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று எண்ணி எருசலேம் மேல் வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள் சீடர்கள். மரித்த நிலையில் நடைபிணங்களாக இருந்த சீடர்களுக்கு உயிர்த்த இயேசு தரிசனமானார். எந்த சீடர்கள் பயந்து ஒளிந்து வாழ்ந்தார்களோ அவர்கள் தைரியமாய் வெளியே வந்து பகிரங்கமாக சாட்சியிட்டார்கள். இயேசுவின் உயிர்பிற்கு இது மிகப்பெரிய சாட்சி. இயேசுவை விசுவாசித்தவர்கள் அவர் மரணமடைந்தபோது சந்தேகமடைந்தார்கள். இயேசுவை விசுவாசிக்காத சந்தேகப் பேர்வழிகள் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிகளாகிறார்கள். கல்லறையின் வாயில்கள் அடைக்கப்பட்ட பொழுது சீடர்களின் நம்பிக்கை புதையுண்டு போயிற்று.

சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இயேசுவின் உயிர்ப்பிற்கு நாம் சாட்சிகளாவோம். உயிர்த்தெழுதல் உண்டு என்று விசுவாசித்து வாழ்வோம்.

கர்த்தாவே, இயேசுவின் உயிர்த்தெழுதல் வழியே எங்களுக்கு புது நம்பிக்கையைத் தந்திருக்கிறீர். நன்றி. உயிர்த்தெழுதல் எங்களுக்கு புது வாழ்வைக் கொண்டு வருகிறது. இவற்றை நினைவில் நிறுத்தி புது சமூகமாக நாங்கள் வாழ வழிநடத்தும். இயேசுவின் வழியே, ஆமேன்.