26 ஜனவரி, 2021          செவ்வாய்

“அவரில் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.”

– யோவான் 1 : 4

இன்று இந்தியாவின் குடியரசு தினம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா கடந்து வந்த பாதை கரடுமுரடாகவும் பலநேரங்களில் இருண்டதாகவும் இருந்தது. ஆனால் நாம் தொடர்ந்து இருட்டிலேயே இருந்துவிடவில்லை. கர்த்தர் சரியான நபர்களின் வழியே கொஞ்சம் கொஞ்மாக நம்மை முன்னேற்றிக் கொண்டேதான் இருக்கிறார். ஒருவேளை நாம் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் வரவில்லை என்று சொல்லுவோமானால் அதற்கு நம்முடைய குறைவுகளும் காரணமாக இருக்கலாம்.

எந்த ஒரு இருண்ட சூழலிலும் நாம் நம்முடைய நம்பிக்கையை எதில் வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே வெளிச்சத்தைக் காணமுடியும். ஒளியைத்தருவதற்கு எதிரான விஷயங்களை நாம் நம்பிக் கொண்டிருந்தோமானால் தொடர்ந்து இருளிலேயே இருக்க நேரிடும்.  நாம் செயல்படுவதற்கு ஏற்ற சூழல்களுக்காகக் காத்திருப்பதைவிட இருக்கிற நிலையிலேயே வெற்றிகரமாகச் செயல்பட முயலுதலே நல்லது. ஒன்றுமில்லாதிருந்த இப்பேரண்டத்தை தனது வார்த்தையால் உருவாக்கின கர்த்தரை முன்மாதிரியாகக் கொள்ளுவோம்.

நம்முடைய வாழ்வும் பாவத்தால் கரடுமுரடாக, தரிசாக கிடக்கலாம். குற்ற உணர்வால் நிறைந்து கிடக்கலாம். கடவுளின் ஒளிக்காகக் காத்துக்கிடப்பவர்களில் ஒருவரா நீங்கள்? கடவுளின் அன்பு பூரணமானது. அவரது மன்னிப்பு மிக உயர்ந்தது. இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உரியது. அவர் பாவங்களையே வெறுக்கிறார். பாவிகளை அல்ல. மனிதனின் சுயநலம், பேராசை மற்றும் வெறுப்பை ஆண்டவரின் இரக்கம், கருணை மற்றும் அன்பு மாற்றிவிட முடியும். கொடூரமான சவுலை தூய பவுலாக மாற்றிய அன்பு அவருடையது. வல்லமை அவருடையது. மன்னிப்பு அவருடையது.

இயேசுவின் மீது நம்பிக்கையற்ற குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் நற்செய்தியையும் கிறிஸ்துவின் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும்போது, முழுக் குடும்பமும் கடவுளின் அன்பின் ஒளியால் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே கிடைக்கும் மகத்தான மன்னிப்பை மனிதனுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் வழியே அவருடைய வாக்குறுதியையும் நித்திய நம்பிக்கையையும் நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். மனுஷர்களான நமக்கு ஒளியாயிருக்கிற ஆண்டவரில் நிலைத்திருப்போம்.. 

பரலோகத் தகப்பனே, இருளை அப்புறப்படுத்தி எங்களுக்கு நம்பிக்கையைத் தரும் இயேசுவின் வெளிச்சத்திற்கு நன்றி. அவருடைய நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.