தரிசனம் 12 : 7-12 27 பிப்ரவரி, 2018 செவ்வாய்
“நீங்கள் கடவுளால் உண்டானவர்கள்; …உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” – 1 யோவான் 4 : 4
இந்தத் தியானப் பகுதியில் கடவுளைச் சார்ந்த மக்கள், அவர்களின் நம்பிக்கை, அவர்களின் வெற்றி பற்றியும் யோவான் குறிப்பிடுகின்றார். நீங்களோ அவர்களை ஜெயித்து விட்டீர்கள் என்ற யோவான், உறுதியாகக் கூறுகின்றது என்னவெனில் நன்மைக்கும், தீமைக்கும் நடைபெற்ற போராட்டத்தில் நன்மை வென்றது என யோவான் வாசிப்பு பகுதியில் விளக்குகிறார்.
கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் மக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு இடம் கொடுக்காமல் அவர்களை வென்று வாழ வேண்டும். ஏனெனில் கடவுளுடைய பிள்ளைகள் ஜெயத்துக்குரிய பிள்ளைகளாக வாழுகின்றனர். வெற்றியைத் தருகின்றவர் பெரியவர். மனுக்குலத்திற்கும் முதன்மையானவர். உலகோர் விரும்பும் போதனைகளை இன்றைய ஊழியர்கள் தருகின்றார்கள். சரீரசுகம், உத்தியோக உயர்வு, வேலை வாய்ப்பு, பெண், மாப்பிள்ளை பார்த்தல் இவை பற்றியே தரிசனங்கள், அற்புதங்கள் அடையாளங்கள் பல பாஷைகள் சாட்சியங்கள் கூறப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் கிருபை, ஆண்டவர் தரும் இணையற்ற இலவச பாவமன்னிப்பு மறைக்கப்படுகின்றது. மனந்திருந்துதல், விசுவாசம் கடவுளின் வரம் என்பதை மறந்துவிட்டோம். இவை மனிதத் திறமைகளாக கூறப்படுகின்றன.
இக்குழப்ப வெள்ளத்தில் நாமும் அடித்துச் செல்லப்படாமலிருக்க கடவுள் அருள் தரட்டும். சத்தியத்துக்கு விரோதமான கொள்கைகள், அசைவாடும் அற்புதங்கள் போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து கடவுள் நமக்கு விடுதலை தரட்டும். இவற்றை ஜெயிக்கும் சக்தியை கடவுளே எங்களுக்குத் தாரும் எனத் தினமும் ஜெபிப்போம்.
எங்கள் தந்தையாகிய இறைவனே! தவறான போதகத்தினின்று எங்களைக் காப்பாற்றும். சரியான போதனைக்கு செயல்முறை வடிவம் தர அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
