தரிசனம் 22: 11-13                   22 ஜுலை, 2021 வியாழன்

“அவர் வெளிப்படும் போது அவரை விட்டு போகாதிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.” – 1 யோவான் 2 : 28

அரசின் உயர்பதவியில் இருப்போர் சில வேளைகளில் தவறு செய்கின்றனர். இதனால் தண்டனைக்குள்ளாகின்றனர். இதினிமித்தம் தன் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்துடன் காவலரோடு செல்கின்றனர்.

கிறிஸ்துவின் வருகையில் நாம் வெட்கப்பட்டுப் போகாதிருக்கும்படி அவரில் நிலைத்திருக்கும்படி தியானப் பகுதியில் யோவான் ஆலோசனை கூறுகிறார். யோவான் இயேசுவுக்கு அன்பான சீடர். கல்வாரி சிலுவை வரை சென்றவர். இயேசுவின் உயிர்ப்பைக் கண்டவர். பத்மு தீவில் ஆவியானவரால் தரிசனம் கண்டவர். இயேசு திரும்ப வருவார் என்று யோவான் எழுதினார். அப்போஸ்தலர் 1:11ல் கலிலேயராகிய மனுஷரே ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள். உங்களிடத்திலிருந்து வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசு எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ, அவ்விதமாகவே திரும்ப வருவார் என எழுதப்பட்டுள்ளது. தூதரின் சொற்களைக் கேட்டவர்களில் ஒருவர் யோவான்.

நம் விசுவாச அறிக்கையிலும், இயேசு உயிருள்ளோரையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்க திரும்பி வருவார் என அறிக்கையிடுகிறோம். இயேசு வரும் போது இறை மக்களுடன் நேரில் பேசுவார். பொறுப்புகள் வகித்திருந்தவர்களிடம் கணக்குக் கேட்பார். இயேசு கூறிய ஒரு உவமையில் எஜமான் பொறுப்புகளைக் கொடுத்து வெளியூர் சென்றார். திரும்பி வந்து பொறுப்புக்களைப் பற்றிக் கேட்டார். சரியாக கணக்குக் கொடுத்தவர் பாராட்டப்பட்டார். பொறுப்பைச் செய்யாதவர் வெட்கித் தலைகுனிந்தார். இயேசுவின் வருகையில் விசுவாசிகள் வெட்கப் படாதிருக்க, ‘கடவுளின் நீதியிலும் அவரைப் பற்றும் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும்’ நிலை நிற்கச் சொல்லுகிறார்.

தரிசன ஆகமத்தில், ‘அநியாயம் செய்கிறவன் அநியாயம் செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், நீதி செய்கிறவன் நீதி செய்யட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன்’ என எழுதினார். இயேசுவின் வருகையில் வெட்கப்படாதிருக்க இறை வார்த்தையில், விசுவாசத்தில் நிலை நிற்போம். ஆண்டவரே வாரும்.

வரப் போகும் இயேசுவே, உமது வருகையில் நாங்கள் வெட்கப்படாமல் உம்மைச் சந்திக்க விசுவாசத்தில், பரிசுத்தத்தில், கடைசி வரை உம்மில் நிலைத்திருக்க பலம் தாரும். ஆமேன்.