1 சாமுவேல் 14 : 6-10                                   22 ஜுன் 2021, செவ்வாய்

“….கர்த்தர் நமக்காகக் காரியம் வாய்க்கச் செய்வார்;….” – 1 சாமுவேல் 14 : 6

யோனத்தான் என்ற பெயருக்கு கடவுள் கொடை என்று பொருள். பெலிஸ்தியர் மிக்பாவிலும் இஸ்ரவேலர் மிக்ரோளிலும் போருக்காக முகாமிட்டிருந்தார்கள். இரு படைகளுக்கும் இடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. பள்ளத்தாக்கில் பல பாறைகள் இருந்தன.

யோனத்தானுக்கு ஒரு துணிவுமிக்க எண்ணம் தோன்றியது. புது முயற்சியில் இறங்கினார். தன் கருத்தை மெய் காவலினிடம் பகிர்ந்து கொண்டான். சிலரைக் கொண்டாகிலும் பலரைக் கொண்டாகிலும் இஸ்ரவேலரைப் பகைவரிடமிருந்து விடுப்பது கடவுளுக்கு இயலாத காரியமல்ல. கர்த்தர் நமக்காக காரியத்தை வாய்க்கச் செய்வார் என்ற நம்பிக்கையில் செயலாற்றினார். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கே கடவுள் உதவி செய்கிறார் என்று நம்பினார். கிதியோனின் வரலாறு யோனத்தானுக்கு நினைவில் வந்திருக்கும்.

பெலிஸ்திய படைவீரர் பார்க்கும்படி அவர்கள் முன் நெருங்கிச் செல்வோம். அவர்கள் தங்களைக் கண்டு நீங்கள் எங்களிடம் வாருங்கள் நாங்கள் உங்களோடு போரிட வருகிறோம் என்று சொன்னால் அது தங்களுக்கு சாதகமான அடையாளமாகும் என்று பேசிக் கொண்டு மெதுவாக பாறைகளின் மறைவில் முன்னேறிக் கொண்டு தங்களை பெலிஸ்தியர் காணும்படி சென்றனர்.

பெலிஸ்தியர் இவர்கள் இருவரையும் கண்டவுடன் எள்ளி நகையாடி இங்கே வாருங்கள். உங்களுக்கு நல்ல வேடிக்கை காட்டுகிறோம் என்றார்கள். இதை கடவுள் தங்களுக்கு அளித்த நல்ல அடையாளம் என்று எண்ணி பாறையின் மீது ஊர்ந்து சென்று முதலடியிலேயே இருபது பேரை வெட்டி வீழ்த்தினார்கள். தங்களைத் தாக்கினது இரண்டு பேர் தான் என்பதை உணராமல் பெலிஸ்தியர் குழப்பமடைந்து சிதறி ஓடினார்கள்.

சவுல் யோனத்தானும் அவன் மெய்க்காவலனும் தான் பெலிஸ்தியரிடம் சென்ற இக்காரியத்தை செய்தார்கள் என்பதை அறிந்தார். உடன் சவுல் படைகளுடன் முன்னேரி பெலிஸ்திய படைகளை முறியடித்தார். கடவுள் யோனத்தானின் துணிவான செயலை வாய்க்கப்பண்ணினார். இஸ்ரவேலர் வெற்றி பெறச் செய்தார். அன்பானவர்களே கடவுளை நம்பி நாம் செயல்களில் இறங்கும் அவர் அதை வாய்க்கப் பண்ணுகிறார். நம்பிக்கையோடு கடந்த கால நிகழ்வுகளை ஆய்ந்து பார்ப்போம். அதன் அடித்தளத்தில் கடவுளை நம்பி செயல்படுவோம். கடந்த கால அனுபவங்கள் எதிர்கால வாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக அமையட்டும்.

கடவுள் இன்றும் இயற்கையின் வழியாகவும் சக மனிதர்கள் வழியாகவும் நம்மோடு பேசுகிறார். இறைவார்த்தையில் நிலை நிற்போம். விசுவாசத்தில் முன்னேறி சென்று வாழ்வில் வெற்றி காண்போம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! எங்கள் வாழ்வில் உம்மில் வைக்கிற விசுவாசத்தில் நிலைத்திருந்து முன்னேறி செல்ல கிருபை செய்யும் இயேசுவில் பிதாவே. ஆமேன்.