லூக்கா 11 : 11-13 30 ஜனவரி, 2018 செவ்வாய்
“உம்முடைய ராஜ்யம் வருவதாக….” – மத்தேயு 6 : 10
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஜனவரி 30. காந்தீயத்தை நாம் வாழ்ந்து காட்டுவதே அண்ணல் காந்தியை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதின் பொருளாகும். சுதந்திர அரசில் வாழுகின்ற குடிமக்களாகிய நாம், இறைவனின் அரசில் வாழுகின்றோம் என்பதையும் நினைவு கூருவோம். இறைவனின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டபோது படைப்பினங்கள் யாவற்றோடும் மனிதனுக்கு நல்லுறவு இருந்தது. இது இறை அரசின் துவக்கம். துவக்ககால மனிதர், கீழ்ப்படியாமையால் இறை அரசின் மேன்மையை இழந்தனர். பாவத்திலிருந்து மனிதரை மீட்க வந்த இயேசு, திரும்பவும் இறை அரசின் அனுபவமாக உலகில் வந்தார். ஆகவே இறை அரசு `வந்தது’ என்பது உண்மை. `வந்து கொண்டே இருக்கிறது’ என்பதுவும் உண்மை. `இனியும் வரும்’ என்பதுவும் உண்மை.
இறை அரசை மக்கள் புரிந்துகொள்ள இயேசு விரும்பினார் என்பதை `உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்ற சொற்றொடர் விளக்குகிறது. அவருடைய ராஜ்யம் நாம் கேட்காமலே தானாகவே வரும். ஆனால் அது என்னிடத்தில் வந்திருக்கின்றதா? அதாவது நான் கடவுளின் ஆளுகைக்குள் இருக்கிறேனா? என் வழியாக கடவுளின் ஆளுகை மற்றவருக்கும் விரிவடைகிறதா? அருள், அன்பு, இரக்கம், கருணை நிறைந்த இறை அரசு எங்கும் பரவ வேண்டும். இறை அரசின் அனுபவம் பிறர் பெற, இன்று ஏதாயினும் ஒரு சிறு செயலைச் செய்வோம்.
அருள் நிறைந்த ஆண்டவரே, உமது அரசில் என்னைச் சேர்த்திருப்பதற்காக நன்றி. அதில் நிலைத்து வாழவும், பிறரை இணைத்து வாழவும் எனக்குப் பலம் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
