மத்தேயு 28 : 11-15                              30 மார்ச், 2020-திங்கள்

“அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட படியே செய்தார்கள்…” – மத்தேயு 28 : 15

உலகில் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வேலையையும் உழைப்பையும் அவனே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனக்கு கடவுள் தந்த திறமை, அறிவு இவற்றைப் பயன்படுத்தி வாழ்வை நானே அமைத்துக் கொள்கிறேன். எனக்குரிய சம்பளம் போதவில்லையெனில் நான் அதிகமாக உழைக்க வேண்டுமே தவிர திருடக் கூடாது. பேராசையும் தேவையில்லாதது.

பண ஆசையே லஞ்சம் வாங்குதற்கான முதல் காரணம். ஆடம்பர வாழ்வு, பெருமை, புகழ் இவை தான் வாழ்க்கை என முடிவு செய்கிறவர்கள் இந்த கொடுமையான பாவத்தைச் செய்கிறார்கள். பிறரின் பணத்தை, அதிகாரத்தைக் காட்டி, பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அபகரித்தல் லஞ்சமாகும். இயேசுவின் பாடுகளிலும் லஞ்சம் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். பண ஆசை நிறைந்தவர்கள் லஞ்சம் பெற்று இயேசுவுக்கு எதிராக நின்றார்கள். குரல் எழுப்பினார்கள். பரிதானம் பெறுவது கடவுளின் வார்த்தைகளுக்கு எதிரானது.

அனைத்து லஞ்சங்களும் வெளிப்படையானவை அல்ல. அனைத்தும் பணம் சம்மந்தப்பட்டவைகளும் அல்ல. மக்கள் பரிதானம் வாங்கியோ பாரபட்சம் காட்டியோ நீதியைப் புரட்டக் கூடாது என திருமறை கூறுகிறது. எப்படியெனில் லஞ்சம் பிறருக்குக் கிடைக்கவேண்டிய வாழ்வை, நீதியை பறித்துக்கொள்கிறது.

லஞ்சம் வாங்குகின்ற, கொடுக்கின்ற இந்தப் பாவ செயலால் ஏழைகள் வாழ்வு உயராதபடி அநீதி இழக்கப்படுகிறது. இச்செயலில் இன்று ஈடுபட்டிருக்கிறவர்கள் சிலுவையில் இயேசுவின் ஆணி பாய்ந்த கைகளை பார்த்து மனந்திரும்ப வேண்டும். இதற்காகவே அவர் தம் தூய்மையான கைகளை நமக்கு முன்பாக விரித்துக் காட்டுகிறார். நெஞ்சங்கள் அமைதி பெற லஞ்சங்கள் அகல வேண்டும். கடவுள் நம் கைகளை பரிசுத்தமாக்குவராக!

சுத்தம் விரும்பும் கடவுளே! எங்கள் உள்ளங்கள் மாசற்றதும் எங்கள் கைகள் சுத்த மானதாகவும் இருக்க வரம்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.