2 இராஜாக்கள் 13 : 1-10 30 ஜூலை, 2020 வியாழன்
“யோவாகாஸ் கர்த்தரை நோக்கி கெஞ்சினான்,… அவனுக்குச் செவி சாய்த்தார்.” – 2 இராஜாக்கள் 13 : 4
`இறைவனை சிக்கென பிடித்தேன்’ என்பது வள்ளலாரின் வரிகள். துன்பம், கஷ்டம் வரும்போது மனிதர் நமக்கு உதவினாலும் இறைவனின் உதவிதான் நமக்கு தேவை. இறைவனின் வழியாகவே மனித உதவிகள் நமக்கு வரும். இறைவனை பற்றிக் கொள்வோர். பாதுகாக்கப்படுவார் என்பது உண்மை.
யோவாகாஸ் துன்பத்தின் மத்தியில் இறைவனிடம் கெஞ்சி பாதுகாப்பை பெற்றதை தியானப்பகுதியில் காண முடிகின்றது. கி.மு. 815-801 இல் இஸ்ரவேலை அரசாண்ட 11 வது அரசன். யோவாகாஸ் கடவுளின் பார்வையில் தீமையானதை செய்தார், அதிலும் தன் முன்னோரைப் பின்பற்றினார். இது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரை அசீரியர் கையில் ஒப்படைத்தார். இஸ்ரவேல் நாடு ஒரு அடிமை நாடாக மாறியது. யோவாகாஸ், அந்நாட்களில் கர்த்தரை நோக்கிக் கெஞ்சினான். சீரியாவின் அரசன் இஸ்ரவேலை ஒடுக்கி அவர்களுக்கு வருவித்த உபத்திரவத்தை கர்த்தர் கண்டு அவனுக்குச் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகனை அனுப்பினார். அவர்கள் சீரியரின் கையின் கீழிருந்து நீங்கினார்கள்.
கடவுளின் அருளை கெஞ்சி பெற்றாலும் மக்கள் முந்திய பாவங்களிலே நிலைத்திருந்தார்கள். அசீரியா அரசன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்தின் தூசிபோல் ஆக்கியிருந்தான். தாங்கள் செய்த பாவத்தினால் இஸ்ரவேல் முழுவதும் அழிக்கப்பட்டது.
கடவுளின் அருள் கிடைக்கும் போது அதை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை முறையை மாற்றி தூய்மையுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை இஸ்ரவேலர் மறந்து போனார்கள். தண்டனை அனுபவித்தார்கள். நம்முடைய வாழ்விலும் கடவுள் கொடுக்கும் வாய்ப்புகளை நேர்த்தியான முறையில் பயன்படுத்துவோம். மகிழ்ச்சியோடு வாழுவோம். நாம் அழிவுக்குரியவர்கள் அல்ல, அடிமைக்குரியவர்களும் இல்லை கடவுளுக்குரியவர்கள். மறக்காமல் அவருடையவர்களாக வாழ்வோம். கடவுள் இயேசுவில் நம்மை மீட்டு சுதந்திரராக நித்திய வாழ்வுக்கு சொந்தக்காரர்களாக மாற்றியிருக்கிறார். கடவுளில் மகிழ்ச்சியோடு வாழுவோம்.
கடவுளே, நாங்கள் எங்களை திருத்திக் கொண்டு வாழ வாய்ப்பு கிடைக்கும் போது அதை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வை, சுயாதீனமாக வாழ பெலன் தாரும். சாத்தானுக்கு அடிமையாகாதபடி காத்துக் கொள்ளும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
