நீதிமொழிகள் 4 : 1-4                             11 ஆகஸ்ட், 2020 செவ்வாய்

“யாவீர்…இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரர் இருந்தார்கள்.” – நியாயாதிபதிகள் 10 : 3

பல குடும்பங்களில் பிள்ளைகளிடையே பிரச்சனை தோன்றுவதற்கு பெற்றோரே ஒரு விதத்தில் காரணமாக அமைகின்றனர். ஒரு பிள்ளையை வெறுப்பதும் இன்னொரு பிள்ளையை அளவுக்கு அதிகமாக கொஞ்சுவதும் அவர்களுக்கிடையே பொறாமையை பகையை வளர்த்து விடுகிறது. திருமறையில் யாக்கோபு என்பவரை குறித்து வாசிக்கிறோம். அவர் தம் குமாரரில் யோசேப்பிடம் அதிகமாக அன்பு கூர்ந்ததால் பிற பிள்ளைகள் யோசேப்பை பகைக்கிற நிலை ஏற்பட்டது.

யாவீர் இஸ்ரவேலில் பல வருடங்கள் நியாயாதிபதியாக இருந்தவர். தன் வீட்டிலும் பிள்ளைகள் மேல் அதிக கவனம் செலுத்தினார். ஒன்றல்ல இரண்டல்ல முப்பது பிள்ளைகளையும் ஒன்று போல நேசித்தார். அனைவருக்கும் ஒரே மாதிரியான வாகனமாக கழுதையை கொடுத்திருந்தார். முப்பது பேரும் சென்றுவர முப்பது ஊர்களை ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊர் என்று சொல்லாமல் முப்பது ஊர்களும் முப்பது பேருக்கும் சொந்தமானது என்ற எண்ணத்தை உருவாக்கி இருந்தார்.

இதை ஒரு கூட்டுத் தலைமை என்றும் கூறலாம். யாரும் தாழவோ, உயரவோ செய்யாமல் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் நிலை இதில் ஏற்படுகிறது. தாங்கள் சென்ற வந்த இந்த முப்பது ஊர்களையு¹ம் தங்கள் தந்தை பெயரிலேயே யாவீர் பட்டி என்று அவர்கள் அழைத்துக் கொண்டனர். இது அவர்கள் குடும்ப நல்லுறவை வெளிப்படுத்துகிறது.

நம்மில் ஒருவர் ஒரு சிறிய அதிகாரத்தில் ஒருவர் வந்தாலும் அவர் பிள்ளைகள் செய்யும் அடாவடித்தனம் சொல்லி முடியாது. இவர்கள் யாவீரின் பிள்ளைகளைப் பார்த்து படிக்க வேண்டும். அதிகாரம், பதவி வரும் போகும். ஆனால் அன்பு தாழ்மை என்றும் நிலைக்கும். மனதை விட்டு நீங்காத நல்ல பெற்றோராக, தலைவராக நாம் வாழ கடவுள் அனுக்கிரகம் செய்வாராக.

கிருபையுள்ள கர்த்தரே! உமதன்பினால் ஆட்கொள்ளப்பட்ட நாங்கள் அந்த அன்பை குடும்பத்திலும் சமூகத்திலும் காட்ட உதவி செய்யும். அதிகார தோரணைணை எங்களை விட்டகற்றும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.