சங்கீதம் 34 : 12-15                                        15 பிப்ரவரி, 2020-சனி

“மெத்தூசலா உயிரோடிருந்த நாளெல்லாம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.” – ஆதியாகமம் 5 : 27

மனிதன் நீண்ட நாட்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. உடற்கூறுகளில் மாற்றங்களை கொண்டு வந்து என்றும் இளமையாயிருக்கும் வழி கிடைத்தால் இது சாத்தியம் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆனால் இது முடியுமா என்பது கேள்விக்குரியே.

திருமறை மாந்தர்களில் அதிக நாட்கள் உயிரோடிருந்தவர் மெத்தூசலா ஆவார். இவர் கடவுளோடு சஞ்சரித்து அவரால் உயிரோடே வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஏனோக்கு என்பவருடைய மகன். மெத்தூசலா சுமார் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள் வாழ்ந்ததாக திருமறை கூறுகிறது. இத்தனை வருடங்கள் வாழ முடியுமா என்ற கேள்வியும் ஆராய்ச்சியும் தேவையில்லை. ஆனால் அதிக நாட்கள் உயிரோடிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திருமறை நன்றாகவே கூறுகிறது. அது குறித்து காண்போம். கடவுளுடைய சித்தத்திற்கும் வழிநடத்துதல்களுக்கும் தங்களை அர்ப்பணித்த ஆபிரகாம், ஈசாக்கு, சாலொமோன் போன்றவர்கள் அதிக நாட்கள் வாழ்ந்தார்கள். நீடித்த நாட்களை விரும்புகிறவர் நல்லெண்ணம் கொண்டவனாய் தீமையை வெறுத்து நன்மையைத் தேடுகிறவனாயிருத்தல் வேண்டும் என்றும் பார்க்கிறோம். நீதிமொழிகளில் கற்பனைகளைக் காத்து நடக்கிறவன் தீர்க்காயிசு பெறுவான் என்று வாசிக்கிறோம். ஞானத்தைத் தேடுவதும் அநியாய லாபத்தை வெறுப்பதும் ஆயுளைக் கூட்டும்.

கடவுள் விரும்புகிறதை நடப்பிக்கும் நமக்கு, நாம் விரும்புகிற தீர்க்காயுசை அவர் தருவார். எப்படி இருந்தாலும் எசேக்கியா ராஜா ஜெபித்து ஆயுளை கூட்டி பெற்றார். நம்மாலும் முடியுமா என்பது கேள்வி. தீர்க்காயுசு பெரிதல்ல. கடவுள் விரும்பும் வாழ்க்கை வாழ்வதே பெரிது. அவர் நம்மை முதிர் வயது வரை வாழச் செய்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லையெனில் அவர் சித்தப்படி மரணத்தை எதிர்கொள்வோம். ஆண்டவரின் சித்தத்திற்கு நம்மை ஒப்புவிப்போம்.

நீண்ட ஆயுள் உள்ளவரே! உம்மாலேயன்றி யாருமே தீர்க்காயுசோடு வாழ்வதில்லை. நாங்களும் வாழ்வோம் என்று சொல்ல முடியாது. இருப்பினும் பாதி வயதில் எங்களை எடுத்துக் கொள்ளாதிரும். உமது சித்தப்படியான வாழ்க்கை வாழ உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.