ஆதியாகமம் 12 : 1-8 ஜூன் 8, 2020 – திங்கள்
“உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத் தத்தம்…. நியாயப் பிரமாணத்தின் மூலமாய்க் கிடையாமல் விசுவாச நீதியின் மூலமாய்க் கிடைத்தது.” ரோமர் 4 : 13
இயேசுகிறிஸ்துவிற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ஆபிரகாம். இஸ்ரவேல் மக்களின் முற்பிதா எனப் போற்றப்படுகின்றவர். ஆபிரகாமை கடவுள் அழைத்தார். நான் காண்பிக்கிற தேசத்திற்குப் போ – உன்னைப் பெரிய ஜனமாக்குவேன் என்று வாக்குத் தந்தார். ஆபிரகாம் பிள்ளைப் பேறு இல்லாதவராக இருந்தும் கடவுள் தமக்கு தேசம் தருவார்; தனக்குச் சந்ததி உண்டு பண்ணுவார் என்று விசுவாசித்தார்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கைப் பலியிடுமாறு கடவுள் கேட்ட போதும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். பலியிடுவதற்கு ஆடு எங்கே என்று மகன் ஈசாக்கு கேட்ட போது ‘கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று கூறினார். ஆபிரகாமின் ஆழ்ந்த இறைப் பற்றுறுதியே அவரைக் கடவுளுக்கு ஏற்புடையவர் என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் தமது கிருபையை ஆபிரகாமிற்கு வெளிப்படுத்தினார். ஆபிரகாம், இறைவனின் வாக்குத் தத்தத்தை நம்பினார். விசுவாசித்தார். ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டார்.
நியாயப் பிரமாணம், அதன் கிரியைகள், விருத்தசேதனம் போன்றவற்றில் இரட்சிப்பு இல்லை. இதை ஆபிரகாமின் சரித்திரத்தின் வழியாக பவுல் தெளிவுப்படுத்துகிறார். ஆனால் நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஆபிரகாமுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆபிரகாம் விசுவாசித்தார். நீதிமான் ஆனார். நியாயப் பிரமாணம் என்பது மோசேயின் காலத்தில்தான் கர்த்தரால் கொடுக்கப்பட்டது. ரோம நூற்றுக்கதிபதியைப் பற்றித் திருமறையில் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். ‘நீர் ஒரு வார்த்தை சொல்லும்; என் வேலைக்காரன் சுகமாவான்’ என்றார். இயேசுவின் வார்த்தையில், அவரில் விசுவாசம் வைத்தார். வேலைக்காரன் சுகமானான். நூற்றுக்கதிபதி இரட்சிப்பிற்குள் வழிநடத்தப்பட்டார்.
இயேசுகிறிஸ்துவினாலேயே இரட்சிப்பு. இந்த இரட்சிப்பு இலவசமாக மனுக்குலத்திற்குக் கொடுக்கப்படுகிறது. கடவுளைக் காண கடவுளுக்கு ஏற்புடையவர்களாக ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. மனுக்குலத்தின் இன்றைய எல்லா வினாக்களுக்கும் இயேசுவே பதில் என்று பறைசாற்றினார் இந்திய இறையியல் வல்லுநரான பால் சுதாகர் என்பவர். இன்றும் நமக்கு இறை வாக்குறுதி உள்ளது. இயேசுவில் ஆமேன் என்று நிறைவேறியுள்ளது. இயேசுவை விசுவாசித்து வாழ்வோமாக!
பிதாவே! உம்முடைய நேசக்குமாரன் இயேசுவில் மீட்பு என்பதை உணர்ந்து அவரில் விசுவாசம் வைத்து வாழ உதவி செய்தருளும். ஆமேன்.
