சங்கீதம் 1 23                                                           ஏப்ரல், 2018 திங்கள்

“பாவம் எங்கே பெருகினதோ அங்கே கிருபை அபரிமிதமாய்ப் பெருகிற்று.” – ரோமர் 5 : 21

`நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்’ என்னும் பழமொழியை நாம் அறிவோம். இதுபோல், பெரியதொரு தண்டனையில் இருந்து தப்பும்போது தான், சட்டத்தின் கடுமை புரியும்.

விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் யூதமதத் தலைவர்கள் மரணத் தீர்ப்பிடச் சொல்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவளுக்கு இரக்கங்காட்டி, மன்னித்து, `போ… இனி பாவம் செய்யாதே’ என்றார்.

மன்னிக்கப்பட்ட இவளுக்குத்தான், சட்டத்தின் கடுமை தெரிந்திருக்கும். நீதிச்சட்டம் ஒழுக்கத்திற்கு நல்லதுதான், சட்டத்தால் மனிதர்களை ஒழுக்கமுள்ளவர்களாக்க முடியாது. அதனால் நம்மை ஆளமுடியாது. கடவுளின் கிருபை நம்மை மன்னிக்கிறது, மாற்றி அமைக்கிறது. ஒழுக்கத்தை நமக்கும் வளர்க்கிறது. ஆகவே கடவுளின் கிருபை நம்மை ஆளமுடியும். கிறிஸ்துவின் கிருபையும், அன்பும், பாவ மன்னிப்பும், நீதிச்சட்டம் சுட்டிக்காட்டும் தண்டனையை இல்லாமலாக்குகிறது. அப்போஸ்தலன் பவுல், `பாவம் எங்கே பெருகினதோ அங்கே கிருபையும் அபரிமிதமாய்ப் பெருகுகிறது’ என்று கூறுவதின் கருத்து இதுதான்.

கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாக மனிதரின் சார்பாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, அதன் கொடுமைக்கும் தன்னை உட்படுத்தி தண்டனையை ஏற்றதால், நம்மை மீட்டுக்கொண்டார். ஆகவே நாம் நியாயப் பிரமாணத்துக்கு இனி அடிமைகள் அல்ல.

நீதிச்சட்டத்தின் கொடுமையை அறியாமலேயே கடவுளின் அன்பை அதிகமாய்ப் பருகினவர்கள் நாம். ஆகவே பாவம் நம்மை பயமுறுத்துவதில்லை, தண்டனை நம்மை அச்சுறுத்துவதில்லை. ஆகவே பாவம் செய்ய நாம் தயங்குவதில்லை. நாம் பாவம் செய்யாமலிருக்க கிருபை பெருகுகிறது என்பதை இன்றைக்கு இப்பொழுதே நினைத்துப் பார்த்து `பாவத்தை வெறுக்கத்’ துவங்குவோம்.

அன்புள்ள இறைவா! உமது மன்னிக்கும் அன்பு, பெரியது. இதற்கு நன்றி கூறுகிறோம். இந்த மன்னிப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ள எங்களைக் கருவிகளாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.