லூக்கா 8 : 43-48 4 ஜூலை, 2017 செவ்வாய்
“ என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.” – யோவேல் 2 : 26
`வேற்றினத்தாரிடையே என் மக்கள் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்’ என்று கர்த்தர் கூறியதாக யோவேல் எழுதி வைத்தார். மானம், ஈனம், வெட்கம் துக்கம் இஸ்ரவேலரை அணுகாதாம்…. ஏன்? இஸ்ரவேலர், கடவுளின் மக்களாக கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்!
நிலமே அஞ்சாதே! விலங்குகளே அஞ்சாதீர்! சீயோன் மக்களே மகிழ்ந்திரு! என பலப் பல தைரிய மொழிகள் கூறப்பட்டன. `ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்’. இது தான் அஞ்சாமைக்கு, வெட்கமின்மைக்கு, மகிழ்ச்சிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.
பெரிய காரியங்களை இயேசு செய்தார். புதுமை அற்புதம், அடையாளம், வல்ல செயல்கள் இயேசுவால் அரங்கேறின. மக்கள் மேல் மனதுருகி, இரக்கம் கொண்டு மக்களின் நம்பிக்கையைப் பாராட்டி சில பல அற்புதங்கள் செய்யப்பட்டன. துன்பத்தின் வேதனையில் `இறைவா ஏன் என்னைக் கைவிட்டாய்’ என்று கசிந்தழுகின்றனர் மக்கள். இயேசுவும் சிலுவை வேதனை தாங்கிட முடியாதவராக `என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று அயர்ச்சியில் கேள்வி கேட்டார். மனித இனத்தின் கைவிடல் வேதனையை மொத்தமாக இயேசு சிலுவையில் அனுபவித்தார் என்று விளங்குகிறது. நமது அவமானத்தை வேதனையை, துன்பத்தை அனுபவத்தில் புரிந்து கொள்ளக் கூடியவர் நமது ஆண்டவர். கைவிடப்பட்ட இயேசு, நமக்காக கைவிடப்பட்டார். இனி எவரும் கடவுளால் கைவிடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்திட, மனித இனத்தின் பதிலாளாக இயேசு கைவிடப்பட்டார். சிலர் இயேசுவைக் கைவிடலாம். இதனால் அவர்கள் அவமானப்படலாம். இயேசு எவரையும் கைவிடுவதில்லை. எவரும் அவமானப்பட இயேசு இடங்கொடுப்பதுமில்லை. நாம் அவருடைய சினேகிதர். நாம் அவருடைய சீடர்கள். நாம் அவரால் உலகில் அனுப்பப்படுகிறவர்கள். நம்மை அவர் கைவிடுவதில்லை. நம்மை அவர் வெட்கப்பட இடங்கொடுப்பதுமில்லை.
இயேசுவைப் போல, பேதுரு கடலின் மேல் நடக்க விரும்பினார். பேதுருவின் விருப்பம் உண்மையான விருப்பம் என நான் நினைக்கவில்லை. கடல் மேல் நடந்தது இயேசுவா, ஆவேசம் அல்லது பிசாசா என்று டெஸ்ட் பண்ணினார் பேதுரு! இயேசுவை ஆவேசம் என்று சந்தேகப்பட்டார். கடலில் அமிழ்ந்தார் பேதுரு! பிறப்பிலேயே மீனவரான பேதுரு நீந்துவதை மறந்தார், தண்ணீரில் மூழ்கினார். அவிசுவாசம் வெட்கப்படுத்தும். விசுவாசம் வெற்றி தரும்.
இனிய இறையவரே! என்னை வெட்கப்படுத்தாதவரே! உமக்கு நன்றி. எப்போதும் என்னுடன் இரும். வழி நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.
