லூக்கா 15 : 13-20 26 பிப்ரவரி, 2020-புதன்
“…தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ்செய்தேன்,….” – லூக்கா 15 : 21
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் திரும்ப திரும்ப தவறு செய்தால் அது அழிவை கொண்டு வரும். செய்தது தவறு என்று தெரிந்த உடன் அதை குறித்து மனம் வருந்தி தன்னை திருத்திக் கொள்வதே ஒருவனை வாழ்வுக்கு வழிநடத்தும். சாம்பல் புதன் கிழமையான இன்று இந்தத் தியானத்தின் வழியே கடவுள் உங்களை மனந்திரும்ப அழைக்கிறார்.
மனந்திருந்திய மைந்தன் பற்றிய செய்தியில் இதைப் புரிந்து கொள்ளுகிறோம். இந்த உவமையில் வருகிற பிள்ளைகள் இருவருமே ஏதோ ஒரு விதத்தில் தவறு செய்தவர்களாகவே இருந்தனர். இளையவன் வெளியே சென்று தவறிழைத்தான். மூத்தவன் வீட்டிற்குள்ளேயே இருந்து தகப்பனின் அன்பை புரியாமலிருந்தான். கடவுள் பார்வையில் இரண்டு பேருமே மனம் வருந்த கடமைப்பட்டவர்களே. புத்தி தெளிகிற போது மனவருத்தம் ஏற்படுகிறது. புத்தி மயங்கி இருக்கிற போது மனவருத்தம் ஏற்படுவதில்லை. புத்தி மயக்கம் நாம் செல்வச் செழிப்பில் புரளும் போது ஏற்படுகிறது. அதிகார உச்சத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. என்னை கேட்பதற்கு யார் இருக்கிறார் என்று எண்ணும் போது ஏற்படுகிறது. வாழ்க்கையில் இவை மாறும் போது மனதில் குழப்பம் ஏற்படுகிறது. தான் செய்தது சரியா தவறா என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. பல சமயம் நமது செயல்களை நியாயப்படுத்தியே நாம் மயக்கத்தை விட்டு எழாதிருப்போம். தவறு என்று எண்ண ஆரம்பிக்கும் போது புத்தி தெளியும். புத்தி தெளிந்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உணரச் செய்யும்.
புத்தி தெளிந்த பின்னரே இளைய மகன் தகப்பனின் அன்பை புரிந்து கொண்டான். அன்பான தகப்பனுக்கு செல்வமல்ல நானே முக்கியமாக இருப்பேன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. திரும்பினான். தகப்பனின் அன்பை பெற்றான்.
நாமும் எத்தனையோ தவறுகளைச் செய்தவர்களாக இருக்கிறோம். மனம் வருந்துகிறோமா? நம்மை நம் தவறுகளுக்காக தண்டிக்காத நம் பரம தந்தை நமக்கு உண்டு. தவக்கால ஆரம்ப நாளில் நிற்கிறோம். நம் பாவங்களுக்காக தன் உயிரை சிலுவையில் கொடுத்த இயேசுவை, சிலுவையை வரும் நாட்களில் அதிகம் சிந்திப்போம். இவைகளை நினைக்கும் போது நம்மில் நிச்சயம் மனஸ்தாபம் ஏற்படும். அன்பான இறைவனைத் தேடி அவரிடம் வருவோம். இயேசுவில் கடவுள் மன்னித்து ஏற்றுக் கொள்ளுவார்.
மன்னிக்கும் கடவுளே! தவறுகள் பல புரிந்து உமது அன்பை புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறோம். எங்களை மன்னியும். எங்களுக்காக சிலுவையில் தன்னுயிரை ஈந்த இயேசு கிறிஸ்துவின் அன்பை புரிந்து உம்மிடம் திரும்ப எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
