அப்போஸ்தலர் 24 : 22-27 25 நவம்பர் 2020, புதன்
“பவுலைக் காவல் பண்ணவும் கண்டிப்பில்லாமல் நடத்தவும்….. கட்டளையிட்டான்.” – அப்போஸ்தலர் 24 : 23
பேலிக்ஸ் கிலவுதி பேரரசனால் விடுதலையாக்கப்பட்ட ஓர் அடிமை. இவர் சிறிது சிறிதாக அதிகாரத்தில் உயர்வு பெற்று செசரியாவின் ஆளுநராய் ஆனார். கூபானுக்குப் பிறகு கி.பி. 52-ல் இருந்து கி.பி. 60 வரை யூதேயாவின் ஆளுநராக இருந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாம் மனைவி முதலாம் ஏரோது அகிரிப்பாவின் மகள் துருகில்லாள். இக்கால கட்டத்தில் சேனாதிபதியாக இருந்தவர் கிலவுதியு லீசியா. இவர் பவுலடிகளாரை கொலை செய்யும் திட்டத்தை அறிந்தார். பவுலடிகளாரின் உயிரைப் பாதுகாக்க பேலிக்ஸ்க்கு கடிதம் எழுதி அவரை பத்திரமாக பேலிக்சிடம் அனுப்பி வைத்தார். பேலிக்ஸ் கடிதத்தைப் படித்து செய்தியை அறிந்து, ஏரோதுவின் கோட்டை மாளிகையில் பவுலை காவலில் வைத்தார். ஜெசிபஸ், டசிடஸ் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பேலிக்ஸ் ஆட்சியில் மக்கள் சமாதானத்தையும் சவுக்கியத்தையும் அனுபவிக்கவில்லை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். பவுலடிகளார் கடைசிப் பயணமாக எருசலேமுக்குச் சென்று அங்கு சிறைப்படுத்தப்பட்டபோதும் பேலிக்ஸ் ஆளுநராக இருந்தார். இவர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதால் நீரோ மன்னனால் பேலிக்ஸ் திரும்ப அழைக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். புதிய ஆளுநராக பெஸ்து நியமிக்கப்பட்டு, பவுலடிகளார் ஒப்படைக்கப்பட்டார்.
பேலிக்ஸ், பவுலடிகளாரிடம் உன் காரியத்தை தீர விசாரிப்பேன் என்றார். அதுவரை பவுலடிகளாரை கண்டிப்பில்லாத காவலில் வைக்க அவருக்கு பணிவிடை செய்பவர்களை தடை பண்ணக்கூடாது என்றும் கட்டளையிட்டார். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஒன்று செல்வந்தரான பவுலடிகளாரிடம் பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்யலாம். இரண்டு தன் மனைவி லீசியாவிடமிருந்து பல தகவல்களை பெறலாம். அதனடிததளத்தில் விடுதலை செய்யலாம். மூன்று யூதர்களை பிரியப்படுத்தவேண்டும் என்பது.
அன்பானவர்களே பவுலடிகளார் ரோமபுரியில் சாட்சி பகரவேண்டும் என்பது கடவுளின் திட்டம். அதனால் அவர் பவுலின் உயிரைப் பாதுகாக்க பலரை கருவியாகப் பயன்படுத்துகிறார். கடவுள் வரலாற்றில் செயலாற்றுகிறவர். நமக்கு உதவி எப்பொழுது தேவையோ அப்பொழுது மக்கள் வழியாக அதைச் செய்கிறார். கடவுளின் பாதுகாப்பும் பராமரிப்பும் எப்பொழுதும் நமக்கு உண்டு என்ற உறுதியில் வாழ்வோம்.
வரலாற்றின் நாயகரே! உம் வழிகளையும் எண்ணங்களையும் எங்களால் அறிய இயலாது என்பதை எப்பொழுதும் உணர்ந்து உம்மை நம்பி வாழ துணை புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
