யோபு 33 : 14-19                                      18 மே, 2017 வியாழன்

“கடவுள் ஒருமுறை பேசுவார், இருமுறையும் பேசுவார், மானிடரோ அதைக் கவனிக்கிறதில்லை.” – யோபு 33 : 14

`தோட்டத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்’. ஆதாம் – ஏவாளிடம் கர்த்தர் சொன்னார். அவர்கள் கேட்கவில்லை. `அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம்’.  சாலமோனிடம் கடவுள் இரண்டு முறை சொன்னார். அவன் கவனிக்கவில்லை. ஒருமுறை இருமுறை மட்டுமல்ல, பலமுறை கடவுள் பேசினாலும், மனிதர்கள் கடவுள் சொல்லுவதை முழுமையாகக் கவனிக்கிறதில்லை.

சத்திய வேதத்தின்படி, கடவுள் மனிதர்களோடு பேசுகிற நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் ஏராளம் சொல்லப்பட்டிருக்கின்றன. முதல் மனிதனாகிய ஆதாம் முதல், காயீன், நோவா, ஆபிரகாம், மோசே, நியாயதிபதிகள், இராஜாக்கள், தீர்க்கத்தரிசிகள், யாவரோடும் கடவுள் பேசினார். நேருக்கு நேராக, சொப்பனங்கள், தரிசனங்கள் வழியாகக் கடவுள் மானிடர்களோடு பேசினார் என்பதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. தியான வசனத்தில் வரும் `பேசுவார்’ என்ற பதம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு கடவுள் மனிதர்களோடு பேசுவதைக் குறிக்கிறது. மனிதனின் பாவங்களை உணர்த்துவதும், மனந்திரும்புதலுக்கென்று அழைப்பதுமான கடவுளின் வார்த்தைகளையே `பேசுவார்’ என்ற சொல் குறிக்கிறது.

தான் ஒரு பாவி என்பதை யோபு ஒத்துக் கொண்டாலும் தியான வசனத்தின் பின்னணி வாக்கியங்களில் தனது நேர்மையைப் பற்றி யோபு பெருமை பாராட்டுகிறார் என்ற எண்ணம் எலிசாவுக்கு உண்டானது. அதனால் யோபுவின் இழப்புகளும் துன்பங்களும் அவரது பாவங்களை உணர்த்துவதற்குக் கடவுள் பேசுகிற ஒரு வழி என்று எலிசா நினைவூட்டுகிறார். ஒருமுறை இருமுறையல்ல, தினந்தோறும் தமது வசனங்கள் வழியாகக் கடவுள் நம்மோடு பேசுகிறார். சில நேரங்களில் சொப்பனங்கள் தரிசனங்களின் வழியாகவும் பேசலாம். சில இழப்புக்கள், ஆபத்துக்கள், நோய்கள் வழியாகவும் எச்சரிக்கலாம். `என் ஜனத்தைப் போகவிடு’ என்று கடவுள் பலமுறை சொன்ன பின்பும் கவனியாமலிருந்த பார்வோனும் அவன் சேனைகளும் செங்கடலில் அமிழ்ந்து போனதை நாம் அறிவோம். சீரழிக்கும் பேரழிவு வருமுன், சிறு சிறு துன்பங்களை கடவுளின் குரலாக எண்ணி கவனித்து மனம் திரும்ப முன்வருவோம். பேசுகிற கடவுளின் அழைப்பிலுள்ள அவரது அன்பைப் புரிந்துகொள்வோம்.

உமது அருள்நிறைந்த வசனங்கள் வழியாகத் தினந்தோறும் எங்களோடு பேசுகிற கடவுளே, உமது வார்த்தைகளைக் கவனித்து மனம்திரும்பும் ஆற்றலைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.