ஆதியாகமம் 21 : 17-20 10 மே 2021, திங்கள்
“…அவனைப் பெரிய ஜனமாக்குவேன்.” – ஆதியாகமம் 21 : 18
இஸ்மவேல் என்ற பெயருக்கு கடவுள் கேட்டருளினார் என்று பொருள். கடவுள் ஆகாரிடம் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியால் அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக என்று சொன்னார். ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவர். ஈசாக்கின் ஒன்றுவிட்ட சகோதரன்.
கடவுள் இஸ்மவேல் என்று பெயரிடச் சொன்னார். அவன் கொடும் குணமுள்ள மனிதனாக வளருவான் என்றும் இஸ்மவேலின் கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும் என்றார். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கு எதிராக அவன் குடியிருப்பான் என்றும் கடவுள் கூறினார்.
கடவுள் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டபடி இஸ்மவேலுக்கு பதிமூன்றாம் வயதில் விருத்தசேதனம் செய்வித்தார். ஆபிரகாம் மரித்தபோது இஸ்மவேலும் ஈசாக்கும் சேர்ந்து அடக்கம் பண்ணினார்கள். இஸ்மவேல் நூற்று முப்பத்து ஏழு வயது வரை வாழ்ந்தார். இஸ்மவேல் மனிதனின் அவநம்பிக்கைக்கும் கடவுளின் நம்பிக்கைத் தன்மைக்கும் சான்றாக விளங்குகிறார். இஸ்மவேலின் வரலாறு விசுவாசத்திற்கும் சந்தேகத்துக்கும் இடையே நிகழும் இக்கட்டான நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது. இஸ்மவேல் வழியாக கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்பதையும் கருணை மிகுந்தவர் என்பதையும் நிரூபிக்கிறார். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவு செய்வதில் கடவுள் விசுவாசத்துக்குரியவர் என்பது தெளிவுபெறுகிறது.
கடவுள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கை கொடுத்தார். அதுமட்டுமல்ல ஆகாரின் குரரைக் கேட்டார். இஸ்மவேலின் குரலைக் கேட்டார். இஸ்மவேலை காப்பாற்றினார். அவர் வாக்களித்தப்படி மாபெரும் இனமாக விருத்தியடைய செய்து தாம் வாக்குமாறாதவர் என்பதை உறுதி செய்தார். இஸ்மவேல் வனாந்தரத்தில் வாழும் சமூகத்தின் மூதாதையராக கருதப்படுகிறார்.
கடவுள் நம் ஒவ்வொருவரின் குரலையும் கேட்கிறார். நம் கண்ணீரைக் காண்கிறார். அவர் நம் வாழ்வில் கண்ணீரை துடைக்கிறவராக மனதுருக்கமுள்ளவராக இருக்கிறார். இதை இயேசுவில் கண்டிருக்கிறோம். அனுபவித்திருக்கிறோம். இந்த உறுதிப் பாட்டுடன் வாழுவோம்.
எங்கள் மன உணர்வுகளை அறிகிற கடவுளே! இயேசுவில் உமது பண்புகளை வெளிப்படுத்தியிருக்கிறீர். இயேசுவை நம்பி வாழ்வு பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.