எண்ணாகமம் 24 : 12-14                                    10 பிப்ரவரி, 2020-திங்கள்

“இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலெயாம் கண்ட போது,…” – எண்ணாகமம் 24 : 1

ஒரு ஊரிலுள்ள அரசு வார்ப்புத் தொழிற்கூடத்திற்கு நிர்வாக அதிகாரியாக ஒரு பெரியவர் வந்தார். அந்தத் தொழிற் கூடத்திற்குப் பணியாட்களைத் தெரிந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது. அவர் கண்டிப்புக்குப் பேர் போனவர். இருப்பினும் பலர் அரசியல் தலைவர்களின் சிபாரிசுகளுடன் அவரை வேலைக்காக அணுகினர். சிலர் பணத்தோடு அவரிடம் வந்தனர். ஆனால் அவரோ ஒரே வார்த்தையில் தகுதியுள்ளவர்களுக்கே வேலை. மற்றவர்கள் எந்த சிபாரிசுடனும், வெகுமதிகளுடனும் வந்தாலும் பயனில்லை என்றார். உண்மையில் அவர் சிறந்த அதிகாரியே.

பிலெயாம் என்பவர் ஒரு காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். மோவாப் நாட்டின் அரசன் பாலாக்கு என்பவர் பணத்தோடும் வெகுமதிகளோடும் அவரை அணுகி, எப்படியாவது இஸ்ரவேலரை சபிக்க வேண்டும் என்றான். அக்காலத்தில் தீர்க்கதரிசிகள் ஒருவரை சபித்தால் அது நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. பிலெயாம் மனதில் சில சலனங்கள் இருந்தாலும் கர்த்தரின் சித்தமில்லாமல் தான் யாரையும் சபிப்பதில்லை என்றான். பலமுறை பாலாக்கு பிலெயாமுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறினாலும் பிலெயாமால் இஸ்ரவேலரை சபிக்க முடியவில்லை. காரணம் அவன் தரிசனத்தில், இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே கடவுளுக்குப் பிரியம் என கண்டு கொண்டார்.

கடவுள் தம் மக்களை ஆசீர்வதிக்கிறார். எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேலரை விடுவித்து கானான் நாட்டுக்கு அழைத்து வரும் வழியில் இச்சம்பவம் நடைபெற்றது. ஒரு நோக்கத்தோடு வழிநடத்தி கொண்டு வரும் கடவுள் இஸ்ரவேலரை எவராகிலும் சபிக்க அனுமதிப்பாரா? மாட்டவே மாட்டார்.

நம்முடைய வாழ்வில் சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், கடவுள் நம்மை விட்டு விலகினார் என்று எண்ணாதிருப்போம். ஒரு திட்டத்தோடு நம்மை வழி நடத்தி வரும் அவர் நம்மை நிர்கதியாக விட மாட்டார். நம்மை அவர் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார். நம்மைச் சபிக்க எண்ணும் பிறர் எண்ணங்களைத் தகர்ப்பார். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்ற நாம் பிறரை ஆசீர்வதிப்போம்.

ஆசீர்வதிக்கிற கடவுளே! உமது பிள்ளைகளை நீர் சபிப்பதில்லை. எவரையும் சபிக்கவும் விடுவதில்லை. நாங்களும் யார் மேலும் சாபச் சொல்லைக் கூறாதபடி தடுத்தாட் கொள்ளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.