தானியேல் 10 : 1-9 19 மார்ச், 2019 செவ்வாய்
“அந்த மூன்று வாரங்கள் முடியுமட்டும் ருசிகரமான ஆகாரத்தை நான் புசிக்கவுமில்லை,….” – தானியேல் 10 : 3
வேலைக்குப் போன அப்பா விபத்தில் சிக்கி விட்டார் என்ற செய்தி அறிந்து குடும்பத்தார் மருத்துவமனைக்கு ஓடினர். கண்ணீரோடு சென்ற அவர்கள் அவரை சுயநினைவிழந்தவராய் கண்டு திகைத்து நின்றனர். வீடு அவரை நம்பியே இருந்தது. வீட்டில் அம்மா, அக்கா, தங்கை மகன் என அனைவருமே அவர் சம்பாத்தியத்தை நம்பியே இருந்தனர். அவர் நிலையைக் கணிக்க ஒரு நாள் ஆகும் என்று மருத்துவர் கூறிவிட்டார். அந்த நேரம் முழுவதும் வீட்டு மக்கள் அனைவரும் அன்ன ஆகாரம் எதுவுமின்றி முடங்கிக் கிடந்தனர்.
தானியேல் தான் கண்ட தரிசனத்தை மனதில் கொண்டு மூன்று வார காலம் உபவாசம் இருந்தார். அது துக்கமான காரியத்தின் வெளிப்பாடாக இருந்தது. நாட்டின் எதிர்காலத்தைக் குறித்த காரியம் அது. அந்நிய நாட்டில் தானியேல் வாழ்ந்தாலும் அந்நாட்டின் அழிவையும் அவரால் தாங்க முடியவில்லை. எனவே ருசியான ஆகாரம் இன்றி மூன்று வார காலம் அமைதியாய் இருந்தார். தானியேல் எதிராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனியில் தங்க வைக்கப்பட்டார். எதிராளிகளை மேற்கொண்ட பாரசீக மன்னர்கள், தானியலின் மக்களுக்கு விடுதலை கொடுத்து தங்கள் சொந்த நாட்டுக்கு செல்ல வழி வகை செய்தனர். பலர் அங்கேயே வாழ தலைப்பட்டனர். அதில் தானியேலும் ஒருவர். தானியேல் பாரசீக மன்னர்களால் உயர்த்தப்பட்டு நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் ராஜாக்களுக்காக ஜெபித்த தானியேல் இங்கு உயர்ந்து நிற்கிறார்.
மேன்மையான அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டிருங்கள் என்று பவுல் கூறுகிறார். நாட்டில் நாம் சமாதானமாய் வாழ ராஜாக்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்றும் அவர் எழுதியிருக்கிறார். நாட்டின் தலைவர்கள் நமக்கு விருப்பமானவர்களோ, விருப்பமில்லாதவர்களோ அவர்களுக்காக ஜெபிப்பதும் உபவாசிப்பதும் கடவுள் பார்வையில் மேன்மையானது. நாம் நமது தலைவர்களுக்காக ஜெபிக்கிறோமா? நாம் நன்றாக வாழ அவர்களுக்காக இறைவனிடம் உபவாசித்து ஜெபிப்போம்.
சர்வ வல்ல கடவுளே! நாங்கள் சுகத்தோடும், நலத்தோடும் வாழ நல்லாட்சி அவசியமாகிறது. இவ்வாட்சியைத் தரும் தலைவர்கள் நலமுடன் வாழ அவர்களுக்காக ஜெபிக்கிறோம். அவர்களை சுகத்துடன் வாழச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.
