1 யோவான் 1 : 5-10                                            08 மார்ச் 2021, திங்கள்

“நமது பாவங்களை அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து…” – 1 யோவான் 1 : 9

மனிதர்கள் பாவக்கறை நிறைந்தவர்கள். இந்த உண்மையை மறுப்பவர்கள் பொய்யர். அவர்கள் கடவுளையும் பொய்யாக்கத் துணிந்தவராவர். அக்காலத்தில் சில சமயத்தவர் தாங்கள் பாவத்தின் சுவடே அற்றவர்கள். கடவுளின் தூய ஒளியிலேயே உலாவுகிறவர்கள் என்று கூறி வந்தார்கள். இதனால் பிற மக்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள மறுத்தனர். இன்றைய கிறிஸ்தவர்களிலும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொள்ளுகிறார்கள்.

கிறிஸ்தவம் வலியுறுத்தும் பாவ உணர்ச்சியை அவர்களுக்கு யோவான் நினைப்பூட்டுகிறார். நான் பாவியில்லை என்று சொல்வது பொய்யிலும் பொய் என்கிறார் யோவான். பாவச் சேற்றில் பல வேளை பலமின்றி நாம் வீழ்ந்தாலும் மீள்வதற்கு வழியுண்டு என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். இயேசு சிந்திய இரத்தம் நமக்கு வாழ்வளிக்கும் இரத்தமாகிறது. சுத்திகரிப்பு எனச் சொல்லப்படுவது பாவ அழுக்கை நீக்கி தூய்மைப்படுத்தும் செயலாகும். கடவுள் உண்மையுள்ளவர். நீதியுள்ளவர். அவர் தம் நீதியைச் செயலில் காட்டுகிறவர். அவரது நீதி அன்பிலும் மன்னிப்பிலும் விளங்குகிறது. இயேசுவின் சிலுவை மரணத்தில் கடவுள் இதை விளங்கச் செய்தார். இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமே நமக்கு சுத்திகரிப்பு வருகிறது. இந்த சுத்திகரிப்பின் செயல் கடவுளிடமிருந்து வருகிறது. இயேசுவின் மீட்புத் தொழில் கடவுளின் செயலே ஆகும்.
நம்முடைய பாவத்தன்மையை கடவுளின் வார்த்தையின் வழியாக அறிந்து கொள்ளுகிறோம். தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும். அவர் நம்மை மன்னித்து பாவத்தின் தண்டனையை நீக்கி நம்மைச் சுத்திகரித்து பரிசுத்தவான்களாக்குகிறார்.

அன்பானவர்களே நாம் பாவம் செய்து விட்டால் அதை கடவுளிடமிருந்து மறைத்து விடலாம் என்று எண்ணக் கூடாது. எதையும் கடவுளுக்கு முன் மறைக்க முடியாது. தாவீது அரசன் உரியாவின் மனைவியோடு நடப்பித்த பாவத்தை கடவுள் கண்டார். நாத்தான் தீர்க்கர் வழியாக பாவத்தை தாவீதுக்கு உணர்த்தினார். தாவீது தன் பாவங்கள் கடவுளுக்கு முன் மறைந்திருக்கவில்லை என்பதை அறிந்தார். தன் பாவங்களை உணர்ந்தார். மனங்கசந்து கடவுளிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டார். மன்னிப்புக் கேட்டார். இரக்கமுள்ள கடவுள் அவர் பாவங்களை மன்னித்தார். அவரைக் கழுவி சுத்திகரித்தார். பாவத்தின் தண்டனையை நீக்கினார்.

நாம் கடவுளின் கண்களை மறைக்க இயலாது. இந்த உணர்வோடு வாழுவோம். பாவத்துக்கு விலகி ஓடுவோம். பாவத்தின் வீழ்ந்து விட்டால் உணர்ந்து மன்னிப்பு கேட்போம். கடவுள் இயேசுவில் நம் பாவங்களை நிச்சயம் மன்னிப்பார்.

அன்பு நிறைந்த கடவுளே! நாங்கள் பாவத்தில் உற்பவித்து பாவத்தில் வாழ்கிறோம். தேவரீர் சகலத்தையும் அறிகிறீர் என்பதை தெரிந்திருக்கிற நாங்கள் எங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெற எங்களை வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.