எபேசியர் 1 : 3-7                  22 பிப்ரவரி 2021, திங்கள்

“…கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய்ப் பாவமன்னிப்பாகிய மீட்பு… நமக்கு உண்டாயிருக்கிறது.” – எபேசியர் 1 : 7

பாவியான மனிதன் கடவுள் முன் கடனாளியாகவும் அவர் மன்னிப்பினால் அவன் கடனை நீக்குபவனாகவும் காண்கிறோம். கடவுள் பாவத்தை வெறுக்கிறவர். ஆனால் பாவியை நேசிக்கிறவர். கடவுள் இரக்கமும் தயவும் உள்ளவர். மிக்க அன்புள்ளவராக பாவத்தை மன்னிக்கிறவர். கடவுளின் பண்புகளில் முதன்மையானது கிருபையாக மன்னிக்கும் பண்பாகும்.

கடவுளின் இருதயம் மனிதனுடைய இருதயம் போன்றதன்று. அவர் பாவிகளின் மரணத்தை விரும்பாதவர். தனது பாவங்களை அறிக்கையிடுகின்ற பாவியை அவர் மன்னிக்கிறார். மனம் வருந்துகின்ற இருதயத்தை தூய்மைப்படுத்தி நம்மை மீண்டும் புதுப்படைப்பாக்குகிறார். கடவுள் முழு மனுக்குலத்தையும் மன்னித்து தம் பிள்ளைகளாக மாற்றி மகிழ்ச்சியோடு வாழ்வதையே விரும்புகிறார். கடவுள் மன்னிப்பின் அளவற்ற ஊற்றாக இருக்கிறார்.

இயேசு மண்ணுலகிற்கு பாவங்களை மன்னித்து மீட்கும் மீட்பராக அனுப்பப்பட்டார். அவர் அனைவரையும் மனம்மாறி மன்னிப்பைப் பெற அழைக்கிறார். ஒருவர் கூட தொலைந்து போகக்கூடாது என்று ஆசிக்கிறார். இயேசுவே நாம் பாவமன்னிப்பைப் பெறுவதற்கான உண்மையான ஊழியர். நம் பாவங்களை தன் மீது ஏற்று பாவங்களை போக்குகிற ஆட்டுக்குட்டி அவர். நம் பாவங்களை பிதாவாகிய கடவுள் நீக்குவதற்காக மன்றாடுகிறார். இயேசுவின் இரத்தத்தினால் நாம் பாவமன்னிப்பைப் பெற்று சுத்திகரிக்கப்படுகிறோம். எவருடைய பாவங்களையும் மன்னிக்கிற ஆண்டவர் அவர். அவர் விண்ணுலகம் செல்லும் முன் பாவங்களை மன்னிக்கிற அதிகாரத்தை திருச்சபைக்கு வழங்கினார். திருச்சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு விசுவாசியும் பாவங்களை மன்னிக்கும்படி கட்டளையிட்டார். தன் சகோதரனை அல்லது சகோதரியை, சக மனிதர்களை மன்னிக்காதவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று இயேசு கற்பித்தார். நம் ஆண்டவர் கற்றுத்தந்த விண்ணப்பத்தில் எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறோம். அதனால் கடவுளே எங்களுக்கு மன்னியும் என்று கேட்கச் சொன்னார். நாம் மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

ஒருவரது பாவங்களுக்கான மன்னிப்பை அடைவதற்கான வழிமுறையாக நாம் ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கையிட வேண்டும். பிதாவாகிய கடவுள் உன்னத ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அனுபவித்திருக்கிறோம். இதற்காக அனுதினமும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் நாம் கடவுளின் சமூகத்தில் பரிசுத்தமுள்ளவர்களாகவும் மாசற்றவர்களுமாய் இருப்பதற்காக நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். சிலுவையில் தொங்கும்போதும்கூட நாம் மன்னிப்பைப் பெறும்படி மன்றாடியவர் நம் ஆண்டவர். இறை மன்னிப்பைப் பெற்ற நாம் பிறருக்கு மன்னிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு பிறருக்கு மன்னிப்போம்; கடவுளிடம் மன்னிப்பைப் பெறுவோம்.

பரம தகப்பனே! எங்கள் எல்லா பாவங்களையும் அக்கிரமங்களையும் இயேசுவில் மன்னித்திருக்கிறீர். மன்னிப்பை ருசித்திருக்கிற நாங்கள் பிறருக்கு மன்னிக்கிற மனநிலையை எங்களுக்குத் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.