யோவான் 6 : 51-56 21 பிப்ரவரி 2021, ஞாயிறு
“…என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் நித்திய ஜீவனை உடையவன்.” – யோவான் 6 : 54
இஸ்ரவேலர் நாடோடிகளாய் அலைந்து திரிந்தவர்கள். இவர்கள் மிருகங்களைக் கொன்று புசித்தார்கள். இதை விழாவாகவும், வழிபாட்டு நிகழ்வாகவும் கொண்டாடினார்கள். காலப்போக்கில் பாவமன்னிப்பைப் பெற மிருகங்களை பலியிட்டு அதன் இரத்தத்தை பலிபீடங்களில் தெளித்தார்கள். இதனால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்று நம்பினார்கள். பாவமன்னிப்பினால் கடவுளோடு சமாதானமும் அதனால் ஒப்புரவும் ஏற்படும் என்று நம்பினார்கள். இஸ்ரவேலரின் விடுதலைப் பயணம் பஸ்கா பலியில் ஆரம்பமாயிற்று. விடுதலை நாளின் இரவில் ஆட்டைப் பலியிட்டு அதன் இரத்தத்தை அவர்கள் வசிக்கும் வீட்டின் நிலைக்கால்களில் பூசினார்கள். பலியிட்ட ஆட்டை சமைத்துப் புசித்தார்கள். விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
ஆதி நாட்களில் இரு சமூகங்கள் உடன்படிக்கை செய்யும் போது மிருகம் ஒன்றை பலியிடுவார்கள். பின்பு அந்த பலி மிருகத்தை சமைத்து இரு சாராரும் புசிப்பார்கள். இதற்கு உடன்படிக்கை விருந்து என்று பெயர். பஸ்கா பலி இரத்தத்தினாலும் பலி விருந்தினாலும் இஸ்ரவேலர் முழு சமூகமாக மீட்கப்பட்டார்கள். இதனால் கடவுளோடு ஆன்மீக ஐக்கியம் கொண்டார்கள். பஸ்கா பலி ஆட்டின் இரத்தத்தினால் இஸ்ரவேலர் விடுதலை பெற்று கடவுளோடு ஐக்கியமானார்கள். கடவுள் இயேசுவில் கல்வாரி மலையில் உலக மக்களோடு புதிய உடன்படிக்கை செய்தார். இந்த உடன்படிக்கையை உறுதி செய்ய இயேசுவை சிலுவையில் பலியிட்டார். பலியிட்ட இயேசுவை பலிவிருந்தாக்கினார். நாம் வாசித்த திருமறைப் பகுதி (யோவான் 6 : 51-56) இதை தெளிவுபடுத்துகிறது.
பரத்திலிருந்து இறங்கிய ஜீவ ஆகாரம் நானே என்றார் நம் ஆண்டவர். அவர் தொடர்ந்து, மனுஷகுமாரன் மாம்சத்தை நீங்கள் புசிக்க வேண்டும். அப்படியே மனுஷகுமாரன் இரத்தத்தை நீங்கள் பானம் பண்ண வேண்டும். இதை நீங்கள் செய்தால் நித்திய வாழ்வை அடைவீர்கள் என்றார். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட இரவு அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி சீடர்களிடம் கொடுத்து தம் சரீரம் என்றார். திராட்ச ரசத்தையும் கொடுத்து என் இரத்தம் என்றார். இயேசு அப்பத்திலும், அப்பத்தோடும், அப்பத்தைக் கொண்டும் தம் சரீரத்தை நமக்குத் தருகிறார். அப்படியே திராட்சை ரசத்திலும், ரசத்தோடும் ரசத்தைக் கொண்டும் தம் இரத்தத்தை நமக்குத் தருகிறார். இயேசு சிலுவையில் பலியிடப்பட்டு இரத்தம் சிந்தினார். இதனால் நம் பாவங்களை மன்னித்து நம்மோடு புது உடன்படிக்கை செய்கிறார். இந்த புது உடன்படிக்கை உறவில் நாம் நிலைநிற்க அவர் பலிவிருந்துமாயிருக்கிறார். திருவிருந்தில் இயேசு நமக்குள் வருகிறார். பாவமன்னிப்பை உணரச் செய்கிறார். புதுவாழ்வு வாழ ஆற்றல் தருகிறார். பாவ வாழ்க்கையை விட்டு புது வாழ்வுக்கு இதன் வழி அழைக்கிறார். கடவுள் ஒவ்வொரு திருவிருந்திலும் இயேசுவில் நம் பாவங்களை மன்னிக்கிறார். நம்மை பிள்ளைகளாக்கி வாழ்விக்கிறார்.
உடன்படிக்கையின் நாயகரே! இயேசுவை பலியிட்டு அவரை பலிவிருந்தாக்கி எங்களை பிள்ளைகளாக ஏற்றிருக்கிறீர். இந்த உறவில் நிலைத்திருக்க கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.